கருணாநிதி மார்ச் 26ல் பிரச்சாரம் தொடக்கம்
சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 26ம் தேதியன்று சென்னையில் தொடங்குகிறார். பொதுச்செயலாளர் அன்பழகன் மார்ச் 30ம் தேதியும், கனிமொழி ஏப்ரல் 5ம் தேதியும் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
ஸ்டாலின் கடந்த ஒருவாரகாலமாக நாகர்கோவிலில் தொடங்கி, தென்மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக நடிகர்களும் பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், தங்களின் தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் கருணாநிதி அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சென்னையில் தொடங்குகிறார்.
பிரச்சார தேதி மாற்றம்
கருணாநிதி, ஏப்ரல் 5ஆம் தேதி கோவையில் இருந்து தனது பிரசார சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ஆம் தேதி சென்னையில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சேப்பாக்கத்தில் கூட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 26ல் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வட சென்னை வேட்பாளர் ஆர்.கிரி ராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தி கருணாநிதி பேசுகிறார்.
பொதுச்செயலாளர் அன்பழகன்
தி.மு.க.பொதுச் செயலாளர் அன்பழகன் வரும் 30ஆம் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கனிமொழியும் பயணம்
ராஜ்யசபா திமுக எம்.பி கனிமொழி ஏப்ரல் 5ஆம் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.