முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா ஆய்வு: கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்து விட்டதா?- கருணாநிதி
சென்னை: முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இது தமிழகத்துக்குப் பாதகம் விளைவித்துவிடும் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே புறக்கணிக்கும் செயலாக அமைந்துவிடும்.
தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல், கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற செய்திகள் வரும்போதெல்லாம் பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்.
தமிழகத்தை பாதிக்கும் இதுபோன்ற பிரச்னைகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விளைவுகள் ஏற்படும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு அனுமதி வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தி.வேல்முருகன் அறிக்கை
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications