விரைவில் திமுகவில் அதிரடி மாற்றங்கள்... பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு
சென்னை: திமுகவில் விரைவில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அம்மாற்றங்களுக்குப் பின்னர் திமுக பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாகவே கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைக் கட்டி வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். கருணாநிதி பிறந்த திருவாரூர் இல்ல வடிவிலேயே மேடை அமைக்கப்பட்டிருந்தது.
அக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:-
எதிர்காலத்தில் வெற்றி...
தோல்வியைக் கண்டு துவண்டு போகும் இயக்கமில்லை திமுக. தற்போது திமுகவின் தோல்விக்காக பரிகாசம் செய்பவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் திமுக பெறப் போகும் வெற்றியைக் கண்டு வாய் பிளந்து நிற்பர்.
கட்டுக்கோப்பில் பழுது...?
திமுகவின் கட்டுக்கோப்பில் பழுது ஏற்பட்டிருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர். அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சிலர் கேள்வி எழுப்பக் கூடும்.
தள்ளிப் போடப்பட்ட முடிவுகள்...
கட்டுக்கோப்பாக நடந்த திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை அறிவித்து விடலாம் என்றுகூட துடித்தோம். எனினும், என்னுடைய பிறந்த நாள் சமயத்தில், அந்த முடிவுகளைத் தெரிவிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டுள்ளோம்.
அதிரடி முடிவுகள்...
ஆனால், விரைவில் அந்த அதிரடி முடிவுகளை அறிவிப்போம். அந்த முடிவுகளுக்குப் பிறகு திமுக கூர் தீட்டப்பட்ட வாளாகவும், பட்டை தீட்டப்பட்ட வைரமாகவும் ஜொலிக்கும்.
பொருளாதார வீழ்ச்சி...
பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் என்றுதான் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், இந்திய திட்டக் கமிஷன் தெரிவித்துள்ள அறிக்கையின்படி பார்த்தால், அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி பிரமாதமாக இல்லை.
குறைவு...
திமுக ஆட்சியில் 2009-10-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 10.8 சதவீதமாக இருந்தது. அது 2010-11-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 13.12 சதவீதமாக உயர்ந்தது. தற்போதைய அதிமுக ஆட்சியில் 2011-12 காலகட்டத்தில் 7.4 சதவீதமாக இருந்த பொருளாதாரம், 2012-13 காலகட்டத்தில் 4.14 சதவீதமாக குறைந்துள்ளது.
சமூக நிலையிலும் பின்னடைவு...
பொருளாதார நிலையில்தான் அதிமுக ஆட்சியில் வீழ்ச்சி என்றால் சமூக நிலையிலாவது முன்னேற்றம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில் 3,432 கொலைகளும், 1,368 கொள்ளைகளும், 938 சங்கிலி பறிப்புச் சம்பவங்களும், 975 வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
விலையுயர்வு...
அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் திமுக ஆட்சியைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது.
திட்டங்கள் முடக்கம்...
திட்டங்கள் முடக்கம்: சிறந்த ஆட்சி என்பது புதிய திட்டங்களைக் கொண்டு வருவதாகும். ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் நிலைதான் அதிமுக ஆட்சியில் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகம், தொல்காப்பிய பூங்கா, சேதுசமுத்திரத் திட்டம் என திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன' என இவ்வாறு தனது உரையில் கருணாநிதி தெரிவித்தார்.
அன்பழகனுடனான நட்பு...
மேலும், தனது பேச்சினூடே தனக்கும், க.அன்பழகனுக்கும் இடையிலான நட்பை நினைவு கூர்ந்த கருணாநிதி தங்களை யாராலும் பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
பத்திரிக்கைகளுக்கு பாதுகாப்பு....
அதேபோல், பத்திரிக்கைகளின் உரிமைகளை காக்கக் கூடிய இயக்கம் திமுக தான் என்றும் தி.மு.க.வுக்கும் பத்திரிக்கைகளுக்கும் இடையிலான உறவு அறுந்துவிடக் கூடாது என்றும் கருணாநிதி கூறினார்.
வாழ்த்து...
இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.