சட்டசபையில் கருணாநிதியை வழக்கம்போல வறுத்த அதிமுக.. 'வழக்கத்துக்கு மாறாக' திமுக பதிலடி!
சென்னை: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடர் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசக்கூடிய ஆரோக்கியமான இடமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, "நாங்கள் மாறவில்லை, மாறவும் விடமாட்டோம்" என்று ஏறத்தாழ அறிவித்துள்ளது அதிமுக மற்றும் திமுக.
முதல்வர் ஜெயலலிதா தனது பதவியேற்பு விழாவுக்கு விடுத்த அழைப்பை ஏற்று, பங்கேற்றார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
விழாவில் அவருக்கு பின்வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலும், அதை குறை சொல்லாமல் அரசியல் மாண்போடு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கிளம்பினார் ஸ்டாலின்.
ஜெயலலிதா ஆதரவு
இந்த தகவல் வெளியானதுமே, ஜெயலலிதாவை வசைபாடி கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால் ஜெயலலிதாவோ யாரும் எதிர்பார்க்காமல் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். ஸ்டாலினுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது அறிக்கையின் சாராம்சம்.
மாறிய அரசியல்
இதற்கு அடுத்தபடியாக, ஜெயலலிதா எனது மூத்த சகோதரி போல.. என்று கூறி அனைவரையும் தலை கிறுகிறுக்க வைத்தார் ஸ்டாலின். இந்த அரசியல் பண்பாட்டுக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன. சிலர் ஏன் இப்படி மாறிவிட்டது தமிழக அரசியல் என ஆய்வு செய்ய ஆரம்பித்து ஆளுக்கு ஒரு கதையை கட்டி விட்டனர்.
ஆளுக்கொரு கதை
98 உறுப்பினர்களை திமுக கூட்டணி பெற்றுவிட்டதால் அவர்களை பகைத்துக் கொண்டு சட்டசபையில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என்று, அவை விதிகள் பற்றி தெரியாமல் அவிழ்த்துவிட்டவர்களும் உண்டு. ஜெயலலிதா தனது பிடிவாத குணத்தை மாற்றி, இணக்கமான மனநிலைக்கு வந்துவிட்டார் என்று ஆரூடம் கணித்தவர்களும் உண்டு.
நல்லது நடந்தால் சரி
எது எப்படியோ, அது நமக்கு எதற்கு? அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் என நான்கே கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட அவை சுமூகமாக நடைபெற வேண்டியது பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடியது என்பதே வெகுவான மக்களின் விருப்பமாக இருந்தது.
போட்டனர் குண்டு
ஜெயலலிதா, ஸ்டாலின் பரஸ்பரம் காட்டிய அரசியல் மாண்பு, தமிழக அரசியலை வேறு தளத்திற்கு நகர்த்தும் முன்னோட்டம் என்று பல நடுநிலையாளர்களும் புழகாங்கிதம் அடைந்திருந்த நேரத்தில்தான் வெளிப்பட்டது அந்த குண்டு.
கருணாநிதி விவகாரம்
கருணாநிதிக்கு சட்டசபையில் வந்து அமர வசதியான இடம் தர வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தவே, பதிலடியாக ஓ.பி.எஸ், ஒரு அறிக்கையை வெளியிட்டு திரி கொளுத்தி போட்டார். அந்த அறிக்கையில் கருணாநிதி-ஸ்டாலின் நடுவே பிளவு இருப்பதாக கூறியதுதான் திமுக தரப்பு கோபத்திற்கு காரணம்.
உள்குத்து
"ஜெயலலிதா அனுமதியின்றி, இப்படி ஒரு அறிக்கையை பன்னீர்செல்வம் தன்னிச்சையாக வெளியிடுவது கனவிலும் நடக்காத காரியம். எனவே வெளியே அரசியல் மாண்பு காட்டிவிட்டு, பன்னீர்செல்வத்தை விட்டு திமுகவை ஆட்டி பார்க்கிறார் ஜெயலலிதா. பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போலதான் இதுவும்" என்று திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று
இருப்பினும், அறிக்கை போரில் ஜெயலலிதா நேரடியாக ஈடுபடவில்லை என்பதால், சட்டசபையில் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு திமுகவை சீண்டாமல் அதிமுகவினர் அவை நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவர் என்பது பெரும்பான்மையோர் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.
ஆரம்பத்திலயே கண்ணகட்டுதே
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச்சை ஆரம்பித்த மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செம்மலை, கடந்த ஆட்சியின் பேரவை கூட்டத்தொடரில் அதிமுகவினர் கடைபிடித்த நடைமுறையையே கையில் எடுத்தார். ஆளுநர் உரையை பற்றி பேசுவதற்கு பதிலாக, கருணாநிதியை பற்றி கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டார்.
கருணாநிதி மீது பாய்ச்சல்
கருணாநிதி பற்றி பேசிய பிறகு திமுகவினர் சும்மா இருக்க முடியுமா. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். ஈழத் தமிழர் பிரச்சினை, கருணாநிதி வாரிசுகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் இருப்பது போன்றவற்றை செம்மலை சுட்டி காட்டி பேசி, முரண்பாடுகளின் மொத்த உருவம் கருணாநிதி என வர்ணித்தார்.
பதிலடி கொடுத்த ஸ்டாலின்
பதிலடி கொடுத்த ஸ்டாலினால் ஜெயலலிதாவை தாக்கி பேசாமல் இருக்க முடியவில்லை. அரசோ, அதிமுகவோ எதுவென்றாலும் ஜெயலலிதாதான் என்ற நிலை இருக்கும்போது, ஸ்டாலினே நினைத்தாலும் ஜெயலலிதாவை தாக்காமல் இருக்க முடியாது. இன்றும் அதுதான் நடந்தது.
இலங்கை பிரச்சினை
விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர் ஜெயலலிதா, போர் நடந்தால் பலரும் சாகத்தான் செய்வார்கள் என இலங்கை உள்நாட்டு போரை பற்றி மெத்தனமாக பேசியவர் ஜெயலலிதா என்றெல்லாம் ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசினார்.
மீட்போம்ங்க
இதை எதிர்பார்த்த, ஜெயலலிதா நேரடியாக ஸ்டாலினுக்கு பதிலடி தர ஆரம்பித்தார். கச்சத் தீவை தாரை வார்த்ததில் திமுகவுக்கு பங்கு உள்ளது எனவும், கச்சத்தீவை திரும்ப பெற அதிமுக அரசு முயலுவதாகவும், கோர்ட்டில் தீர்ப்பு வரும்வரை திமுக காத்திருக்க வேண்டும் என்றும் சீறினார் ஜெயலலிதா.
பாதி நாள் காலி
ஆக மொத்தத்தில், பேரவையின் பாதி நாள் கருணாநிதி vs ஜெயலலிதா போற்றுதல், தூற்றுதல் விவகாரத்திலேயே காலியானது. இதன்பிறகுதான் அந்த பிரச்சினை ஓய்ந்து பிற அலுவல்கள் நடந்தன. மக்கள் பிரச்சினை மட்டும் பேசும் இடமாக சட்டசபை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்வுகள் எதிர்பார்ப்பை ஆட்டம் காணச் செய்துள்ளன.
நோ வாக்-அவுட்
இன்றைய பேரவை கூட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், திமுக தரப்பு வெளிநடப்பு செய்யவில்லை என்பதுதான். ஜெயலலிதா, ஸ்டாலின் ஒரே விஷயங்களில் பதிலடியாக பேசிக்கொண்டபோதும், கருணாநிதி பற்றி விமர்சனம் செய்தபோதும்கூட, திமுக வெளிநடப்பு செய்யவில்லை.
ஆளுநர் உரையிலும் அப்படியே
கடந்த ஆட்சி காலத்தில் நடந்த பேரவை கூட்டத்தொடரில், அதிமுகவினர், கருணாநிதியை விமர்சனம் செய்தபோது திமுக வெளியேறாமல் இருந்தது கிடையாது. அதேபோல, ஆளுநர் உரையின்போது கூட திமுக புறக்கணித்து வெளியேறவில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
காரணம் இதுதான்
கடந்த சட்டசபை தேர்தலின்போது நமக்கு நாமே என்ற பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் பலரும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து 5 ஆண்டுகளில் நீங்கள் சாதித்தது என்ன? எப்போது பார்த்தாலும் திமுக வெளிநடப்பு செய்ததாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டனவே? என்ற கேள்வியை முன்வைத்தனர். இந்த கேள்விகள்தான் திமுகவின் இப்போதைய வெளிநடப்பு தவிர்ப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.