கருணாநிதிக்கு இன்னும் சில வாரங்களுக்கு 'ட்ரக்கியோஸ்டோமி' சிகிச்சை தேவை: காவிரி மருத்துவமனை
கருணாநிதிக்கு இன்னும் சில வாரங்களுக்கு செயற்கை சுவாச உபகரண சிகிச்சை தேவைப்படும் என காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு, ட்ரக்கியோஸ்டோமி எனப்படும் செயற்கை சுவாச உபகரண சிகிச்சை முறை இன்னும் இரு வாரங்களுக்கு தேவைப்படும் என்று காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மருத்துவமனையில் கடந்த 15ம்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக்காக அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், காவிரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவிரி மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட கருணாநிதி தற்போது உடல் நலம் தேறியுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிபயோட்டிக், சிகிச்சைகள் நிறைவடைந்தன.
கருணாநிதி முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ட்ரக்கியோஸ்டோமி டியூப் இன்னும் சில வாரங்களுக்கு தேவைப்படுகிறது. எனவே மருத்துவ மற்றும் செவிலியர் சேவையை காவிரி மருத்துவமனை அவரது இல்லத்திற்கே நேரடியாக வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.