ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட அதே ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையில் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும், ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்த ஒரு தகவல் இது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்றுக் காரணமாக கருணாநிதிக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை வெள்ளிக்கிழமை மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரக்கியோஸ்டோமி என்பது சுவாச பிரச்சினை இருப்பவர்களுக்கு கடைசி கட்ட முயற்சியாக கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.
ட்ரக்கியோஸ்டோமி என்றால்..
தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை ட்ரக்கியோஸ்டோமி என்று அழைக்கப்படுகிறது.
மூச்சு குழாய்
தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
தொண்டையில் அறுவை சிகிச்சை
தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பெருத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்தப்படும் டியூபை தேவைப்படும்போது எடுத்துவிடுவார்கள். தேவைப்படும்போது பொருத்திக்கொள்வார்கள். ஆனால் தொண்டையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே இருக்கும்.
குணமடையும்போதே அகற்றம்
கையில் ட்ரிப்ஸ் போடும்போது, அவ்வப்போது டியூப்பை எடுத்துவிட்டாலும், கையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே விட்டிருப்பார்கள். அதைப்போலவே ட்ரக்கியோஸ்டோமி குழாயும் கழுத்தில் அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது. முழுமையாக நோயாளி குணமடையும்போதுதான், அந்த இணைப்பு குழாய் எடுக்கப்படும்.
ரிஸ்க்கான சிகிச்சை
ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை முறை கொஞ்சம் ரிஸ்க்கானது. அனுபவம் மிக்க டாக்டர்கள்தான் அதை மேற்கொள்ள வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படாமல் தொடர்ச்சியாக கண்காணிப்பில் வைக்க வேண்டும். எனவேதான், டாக்டர்கள் பொதுவாக இந்த சிகிச்சை முறையை கடைசி ஆப்ஷனாக பயன்படுத்துவது வழக்கம்.
ஜெயலலிதாவுக்கும் சிகிச்சை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் உதவியோடு அவர் பேசினார் என அப்பல்லோ ஒருமுறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.