கோட்டைக் கொத்தளத்தில் கொடி ஏற்றும் முதல்வர்களே.. கருணாநிதியை மறந்து விடாதீர்கள்!
- ராஜாளி
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?
இது பாரதிதாசனின் வரிகள். சுதந்திரம் எளிதாக கிடைத்துவிடாது என்பதற்காகவும் அதை நாமே போராடி பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் தீட்டிய கவிதை இது. இதுபோலத்தான் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தன்றும் மாநில ஆளுனர்களே தேசியக்கொடியை ஏற்றி வந்தனர். பொதுவாக டெல்லியில் குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவரும், சுதந்திரத் தினத்தன்று பிரதமரும் கொடியேற்றுவது வழக்கம்.

மாநிலங்களில் மட்டும் இரு தினங்களிலும் ஆளுனர்களே கொடியேற்றி வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாநில ஆளுநர்கள் கொடியேற்றுவதா என்று கொதித்தெழுந்தவர் அதற்காக மத்திய அரசுக்கு பல்வேறு கடிதங்கள் எழுதுகிறார். கோரிக்கைகள் மூலம் வலியுறுத்துகிறார்.
விளைவு 1974 -ம் ஆண்டு மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றலாம் என்ற உரிமை பிரதமர் இந்திரா காந்தியால் வழங்கப்படுகிறது. இப்படியாக மாநில முதல்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. இந்த உரிமையை அவ்வளவு எளிதாக அவர் பெற்றுவிடவில்லை. இதற்கான முயற்சிகள் என்ன என்பதை அறிய சற்று பின்னோக்கி செல்வது அவசியம்.
1969 மார்ச் 17ம் நாள், மத்திய - மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று கருணாநிதி டெல்லியில் அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பின் விளைவாக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் டாக்டர் ஏ.லட்சுமண சாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோர் உள்ளடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய - மாநில உறவுகளும் அதனிடையே உள்ள அதிகார பகிர்வு குறித்தும் ஆராயப்படுகிறது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு 27.5.1977இல் அறிக்கையை வழங்குகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படும்போது அதற்கான தீர்வாக 383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை ஒரு சிறந்த ஆவணமாக உள்ளது.
இப்படியாக மாநில சுயாட்சி கோரிக்கை அண்ணா காலத்திலிருந்தும் அதற்கு முன்பாகவும் ஒலித்துக்கொண்டிருந்தது. அது கருணாநிதி காலத்தில் இன்னும் கொஞ்சம் வலுவடைந்தது. இந்த சூழலில்தான் ராஜமன்னார் குழு மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை, மாநில அரசுகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதற்கு முன்னதாகவே மாநில சுயாட்சி, திராவிட நாடு, புறக்கணிக்கப்படும் மாநில முதல்வர்கள், மாநிலங்களுக்கென தனிக் கொடி ஆகியவற்றின் அவசியம் குறித்தும் உரக்க குரல் கொடுத்து முழக்கமிடுகிறார் கருணாநிதி.
இப்படி நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். அதில் சுதந்திரத்தினத்ன்று தேசியக்கொடியை முதல்வர்கள் ஏற்றலாம் என்று அறிவிக்கிறார்.
அதற்கு முன் 1973-ம் ஆண்டு வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியும் கோட்டையில் கொடிஏற்றி வந்தனர். கருணாநிதியின் நீண்ட நெடிய போராட்டமும், சுயாட்சி முழக்கமும் பெற்றுத் தந்ததே மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இன்று முதல்வர்கள் கொடியேற்றுகின்றனர் என்றால் அதற்கு முழு முதற் காரணமாக அமைந்தது தமிழகமும் கருணாநிதியும் தான்.
கருணாநிதி அன்று பெற்ற இந்த உரிமை குறித்து திராவிட இயக்கத்தின் தலைவர் கி வீரமணியிடம் கேட்டபோது அப்போது இந்தியாவிலேயே முதன் முதலில் கொடியேற்றும் உரிமையை போராடிப் பெற்றது கருணாநிதிதான். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற திமுகவின் தாரக மந்திரத்தை செயல்படுத்தியும் காண்பித்தார் கருணாநிதி என்றவர் அந்த நன்றிக்கடனுக்காத்தான் இன்று அவரது இறுதிப் பயணத்தில் அத்தனை மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அந்த சுதந்திர தின விழாவில் தங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பேசிய பத்திரிக்கையாளர் திரு தராசு ஷியாம் அபோதைய பிரதமர் இந்திராவிடம் தனிக்கொடி, தனிப்பாடல் கொடியேற்றும் உரிமை போன்றவற்றை வலியுறுத்தி போராடி பெற்றவர் கருணாநிதி, மாநிலத்திற்கான பாடல் என்பது மாநில உரிமை ஆகவே நீங்கள் அதை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார் இந்திரா அதுபோல கொடியேற்றும் உரிமையையும் கருணாநிதியின் கோரிக்கையின் அடிப்படையிலேயே வழங்கினார் அது இன்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கிடைத்திருப்பது என்பது மிகப்பெரிய மாற்றம்தான் என்றார் ஷியாம்












Click it and Unblock the Notifications