கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியலாமா...? ஓ.பி.எஸ்.க்கு கருணாநிதி கேள்வி
சென்னை : முதல்வர் ஆவதற்கு முன்பு இருந்ததைப் போன்று அமைதியாக இருப்பதே ஓ.பன்னீர் செல்வத்திற்கு நல்லது. அதை விடுத்து கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய முற்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது தொடர்பாக கடிதம் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் நாட்டை ஆளும் முதல்வர் என்பதை மறந்து போய், ஏதோ கல்லூரியின் முதல்வர் போல, "பினாமி" ஆட்சி என்றால் என்ன, "மைனாரிட்டி ஆட்சி" என்றால் என்ன, "ஆலோசகர்" என்றால் என்ன, "துணை முதல்வர்" என்றால் என்ன என்றெல்லாம் பாடம் சொல்லித்தர முயன்று, ஓர் அறிக்கை தந்திருக்கிறார்.
உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், பேரவைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் தி.மு.க.வினர் நடந்து கொண்டால், அதற்குரிய பலனைத்தான் அவர்கள் பெறுவர் என்றும் மிரட்டியிருக்கிறார்.
தி.மு.க. பன்னீர்செல்வத்தின் வெற்றுச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது, தன் கடமையைச் சட்டப்படி முறையாக நிறைவேற்றும். ஆனால் உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், பேரவைக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகளை பற்றி நான் விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.
"புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணித்தரமான வாதங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் கோப்புகளுக்கு பின்னால் கருணாநிதி ஒளிந்து கொண்டதை நாடே அறியும். தைரியம் இருந்தால் வருகிற 4-ந் தேதி சட்டப்பேரவையில் பங்கேற்று கருணாநிதி பேசத் தயாரா?" என்றும் பன்னீர்செல்வம் சவால் விடுத்திருக்கிறார்.