ஸ்டாலின் - வாசன் சந்திப்பால் கடும் எரிச்சலில் கருணாநிதி.. கலக்கத்தில் காங்கிரஸ் #dmk
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட்டே ஆக வேண்டும் என்பதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருவதால் அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தியில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலின் போதே தமிழ் மாநில காங்கிரஸை திமுக கூட்டணியில் இணைக்க ஸ்டாலின் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் தமாகாவை சேர்க்கவே கூடாது என்பதில் கறாராக இருந்தது. இதனால் வாசன் வேறு வழியே இல்லாமல் மக்கள் நலக் கூட்டணிக்கு போக வேண்டிய நிலை உருவானது.
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு மக்கள் நலக் கூட்டணியைவிட்டு வெளியேறி திமுக கூட்டணியில் துண்டு போடத் தொடங்கினார் வாசன். திமுக கூட்டணியில் முதலிலேயே இடம்பிடித்துவிட்டால் 'பந்தியை'விட்டு எழுந்து போகுமாறு யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளமாட்டார்கள் என்பதுதான் வாசன் கணக்கு.
அதிகாரப்பூர்வமற்ற பேச்சு
இதனால் மு.க.ஸ்டாலினுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வந்தார் வாசன். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். அவர் கருணாநிதியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
வாசனுக்கு அழைப்பு
திருநாவுக்கரசர் கருணாநிதியை சந்தித்துவிட்டால் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும். அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தால் காங்கிரஸ் அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்பதால் உடனே வாசனை சந்திக்க வருமாறு ஸ்டாலின் அழைத்தார்.
கருணாநிதி கொந்தளிப்பு
வாசனும் ஸ்டாலினும் சந்தித்து பேசுகிற செய்தியை டிவியில் பார்த்த பிறகுதான் கருணாநிதிக்கே தெரியவந்ததாம். நம்மிடம் சொல்லாமலேயே ஸ்டாலின் இப்படி செய்கிறாரே.. அதுவும் திருநாவுக்கரசரை வரசொல்லி இருக்கும் நேரத்தில் ஸ்டாலின் இப்படி செய்கிறாரே என கொந்தளித்தாராம் கருணாநிதி.
கடுகடு கருணாநிதி
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்டாலின், வாசனை சந்தித்து திமுக கூட்டணியில் தமாகா இணைந்துவிட்டது என்பதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். பின்னர் கோபாலபுரம் போய் திருநாவுக்கரசரை வரவேற்றிருக்கிறார். திருநாவுக்கரசருடனான சந்திப்பின் போதும் கருணாநிதி கடுகடுவென இருந்திருக்கிறார்.
அன்று முயற்சி பலிக்கவில்லை
ஸ்டாலினைப் பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியால் நமக்கு நெருக்கடிகள்தான் அதிகம்; வாசனைப் பொறுத்தவரையில் நாம் கொடுக்கிற இடங்களை வாங்கிக் கொண்டு டார்ச்சர் செய்யாமல் ஒதுங்கிக் கொள்வார் என்பதுதான் எண்ணம். இதனால் சட்டசபை தேர்தலிலேயே காங்கிரஸை கழற்றிவிட முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை.
அதிகபட்சம் 10%
ஆகையால் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் காங்கிரஸை கழற்றிவிட்டே தீருவது என எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாராம். உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் 25% இடங்களைக் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் தரப்போ காங்கிரஸை வெளியேற்றும் வகையில் 5% முதல் அதிகபட்சமாக 10% வரைதான் தர முடியும் என பேரத்தை நடத்த முடிவு செய்துள்ளதாம்.
காங். விலகும்?
அப்படி செய்தால் வெறுப்பேறும் காங்கிரஸ் விலகி ஓடிவிடும் என்பதுதான் திட்டமாம். ஸ்டாலின் வியூகம் பலிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!