தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடு்ப்பு நடத்த கருணாநிதி கோரிக்கை
சென்னை: தமிழகத்திலும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென்ற தமிழக மக்கள் பெரும்பாலானோரின் கோரிக்கையினை ஏற்று தமிழகத்திலும் அந்தப் பணியை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: திருவள்ளுவர் தினம் தேசிய அளவில் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?
பதில்: பா.ஜ.க. அரசின் வரவேற்றுப் பாராட்டத்தக்க அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. இந்த அறிவிப்பினை தி.மு.க. சார்பில் வரவேற்று, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவர் தினத்தை, தேசிய அளவில் கொண்டாட முன் வந்துள்ள பா.ஜ.க. அரசு, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்து, தமிழர்களின் மற்றொரு நீண்ட காலக் கோரிக்கையினையும் நிறைவேற்றிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே வெற்றிபெற வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறாரே?
பதில்: கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று.
கேள்வி:- ஆட்டோ தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் பற்றி?
பதில்: ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த, அரசு அறிவித்தவாறு இலவச ஜி.பி.எஸ். மீட்டரை உடனடியாக வழங்க வேண்டுமென்றும், அதுவரை அவர்களுக்கு கால அவகாசம் தரப்பட வேண்டுமென்றும் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் கோரிக்கைக்கு தி.மு.க.வின் ஆதரவு எப்போதும் போல உண்டு. அதே நேரத்தில் ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் பாதிக்கப்படாத அளவுக்கு அரசு முடிவெடுக்க முன்வர வேண்டும்.
கேள்வி: சட்டப்பேரவையில் தங்களுக்கு சிறப்பு இருக்கை அமைத்துத் தர வேண்டுமென்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியிருக்கிறாரே?
பதில்: எந்தக் கட்சியிலே இருந்தாலும், அவர் "இலக்கியச் செல்வர்" குமரி அனந்தனின் மகள் அல்லவா? அவருக்குரிய அரசியல் பண்போடு கூறியிருப்பார்.
கேள்வி: பம்பை ஆற்றில் அணை கட்ட தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே?
பதில்: 8-11-2014 அன்று நான் விடுத்த அறிக்கையில் "கேரள அரசின் இந்த முயற்சியைத் தடுக்க தமிழக அரசு, மத்திய அரசின் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன். உடனே முதல்வர் பன்னீர்செல்வம் என்னைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் இதே காரணத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள்.
கேள்வி: கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குமென்று அந்த மாநில சமூகநலத் துறை மந்திரி ஆஞ்சனேயா தெரிவித்திருக்கிறாரே?
பதில்: தமிழக அரசும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென்ற தமிழக மக்கள் பெரும்பாலானோரின் கோரிக்கையினை ஏற்று தமிழகத்திலும் அந்தப் பணி தொடங்குமென்று உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.