உள்ளாட்சி தேர்தல் ரத்து: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவாக நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழி வகுக்கும் என்ற வகையில் இந்தத் தீர்ப்பினை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

ஆனாலும் அ.தி.மு.க. அரசோ, மாநிலத் தேர்தல் ஆணையமோ இந்த நல்லத் தீர்ப்பை வரவேற்காமல், வழக்கம் போல் மேல் முறையீடு செய்தாலும் செய்யக் கூடும். என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து விட்டு, மறுநாளே வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்யக் கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டு விட்டது. அவசர அவசரமாக தேர்தல் தேதியை அறிவித்தது பற்றியும், எதிர்க் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது பற்றியும் நீதிபதி அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இவைகளை எண்ணிப் பார்க்காமல், தேர்தல் தேதியை அவசர அவசரமாக அறிவித்ததால், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகச் சிரமம் எடுத்துள்ளார்கள்.
தேர்தல் பணிகளையும், பிரச்சாரங்களையும் ஆற்றுவதற்கு அவர்களுக்கெல்லாம் மேலும் வாய்ப்பு கிடைத்தது என்ற ஆறுதலை இந்தத் தீர்ப்பு நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications