கருணாநிதிக்கு இன்று 91வது பிறந்தநாள்...!
சென்னை: இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத பெயர் கருணாநிதி. இளம் வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்ட கருணாநிதி, தள்ளாத வயதிலும் தளராறு உழைத்துக் கொண்டிருக்கிறார்.
களைப்பறியா சூரியனாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாநிதியின் வாழ்க்கைப் புத்தகத்தை திருப்பி பார்த்தால் அவர் முள் நிறைந்த பாதைகளைக் கடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்த கதை தெரிய வரும்.
இன்றளவும் இளைஞர்கள் பலருக்கு பாடமாக அமையும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக...

உதித்தது சூரியன்...
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3-ம் தேதி, 1924-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

அரசியல் ஆர்வம்...
இளம் வயதிலேயே சமூக அக்கறைக் கொண்டவராக விளங்கிய கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

திராவிடர் இயக்க மாணவர் அணி....
தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான கருணாநிதி, இந்திப் போராட்டத்திலும் தீவிரம் காட்டினார்.

தொடரும் வெற்றி...
1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டசபையில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டசபை உறுப்பினாராக நீடிக்கிறார். இதுவரை தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவராக திகழ்கிறார்.

5 முறை முதல்வரானவர்...
தமிழகத்தின் முதல்வர் பதவியை ஐந்து முறை அலங்கரித்த கருணாநிதி, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் தலைவராக உள்ளார்.

கட்சியில் பிளவு...
கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது திமுக. அதாவது கடந்த 1972-ல் எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க.வும், 1993-ல் வைகோ தலைமையில் கட்சி பிளவுபட்டு மதிமுகவும் உருவானது.

சமீபத்திய நெருக்கடிகள்...
இலங்கை போரின் போது முதலமைச்சர் பதவியிலிருந்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, 2ஜி புகாரில் மனைவி, மகள் உட்பட திமுகவினர் சிக்கியிருப்பது, மகன்களுக்குள் கருத்து வேறுபாடு போன்றவை கருணாநிதி சந்தித்து வரும் சமீபத்திய நெருக்கடிகள் ஆகும்.

இலக்கிய ஆர்வம்...
அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு இளவயது முதலே கருணாநிதிக்கு இலக்கிய ஆர்வமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி என கருணாநிதியை படைப்பாளியாகவும் இலக்கிய உலகம் கண்டு வருகிறது.

கலைஞர் பட்டம்...
தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications