"அண்ணன்" வர லேட்டாகும்.. எல்லோரும் "குல்பி" சாப்பிடுங்க.. கரூரில் ஒரு "பதவியேற்பு" அக்கப்போர்!
கரூர்: கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக பதவியேற்க விஜயபாஸ்கர் வெகு தாமதமாக வந்ததால் கடும் வெயிலில் காத்திருந்த அதிமுகவினர் கடுப்பாகிப் போனார்கள். குல்பி ஐஸ் சாப்பிட்டும், தலையில் முக்காடு போட்டபடியும் வெயிலில் காய்ந்த அவர்களைப் பார்த்த பொதுமக்கள் அடப் பாவமே என்று பரிதாப்படும் நிலைமை ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களாலும், அடிப்படை தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகி வரை யாரையும் மதிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களையடுத்து மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கரூர் மாவட்ட செயலாளராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிக்கு புதுமுகம் ஆவார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதாவது பதவியேற்றுக் கொண்டார்.

அண்ணன் வருகிறார்.. பர்ராக் பர்ராக்!
கரூர் அருகே வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டதால் அங்கெல்லாம் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் திரண்டு நின்றிருந்தனர்.

இந்தா வர்றார்.. அந்தா வர்றார்
முதலில் 12.30 மணிக்கு வருவதாக கூறினார்கள். பிறகு 1 மணிக்கு வருவார் எனக் கூறினார்கள். இதனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண், பெண்கள் என அதிமுகவினர் கூடிக் காத்திருந்தனர்.

ஒன்றியம், நகரம், பேரூர்..
கரூர் மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூர் கழக சார்பில் அனைத்து நிர்வாகிகளும் ஆங்கே திரண்டனர். இந்நிலையில் சுமார் 1.50 மணி வரை அங்கு யாரும் வரவில்லை. இருந்தாலும் மூத்த நிர்வாகிகள் பலரும் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் நின்று கொண்டிருந்தனர்.

குல்பி எடு.. கொண்டாடு!
விஜயபாஸ்கருக்காக காத்திருந்து காத்திருந்து வெயில் காய்ந்த பலர் ரோட்டோரமாக விற்ற கடைகளிலிருந்து குல்பி ஐஸ், ஐஸ் போன்றவற்றை வாங்கி தாக சாந்தி செய்து கொண்டனர். பெண்கள் சேலைத் தலைப்பால் முக்காடு போட்டு காத்திருந்தனர்.
இவர்களின் காத்திருப்பைப் பார்த்த பொதுமக்கள்தான் அடடா, அடப்பாவமே என்று சிரித்தபடி சென்றனர்.












Click it and Unblock the Notifications