கதிராமங்கலம்.. பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயராமனுக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
தஞ்சை: கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பேராசிரியர் ஜெயராமனுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 9 பேருக்கு நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுக்கான குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த ஜூன் 30-ஆம் தேதி எண்ணெய் குழாய் தீப்பிடித்ததால் பீதியடைந்த மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
அப்போது ஓஎன்ஜிசியின் பொருள்களை சேதப்படுத்தியதாகவும், போலீஸாரை தாக்கியதாகவும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசியின் பொருள்களை சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜெயராமன் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுவிட்டதால் மற்ற 9 பேருக்கு தஞ்சை நீதிமன்றம் நேற்றுநிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர்கள் 9 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் காவல் துறை மீதான தாக்குதல் வழக்குக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜெயராமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவர் தினமும் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.