கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் 10 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமீன் மனுவை தஞ்சாவூர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனைக் கண்டித்தும் ஒஎன்ஜிசி முற்றிலுமாக கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கடந்த மாதம் 30ம் தேதி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இவர்களின் ஜாமீன் மனு தஞ்சை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிராமங்கலத்தில் இன்னும் பதற்றம் தணியவில்லை எனக் கூறிய நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 10 பேரும் வரும் 28ம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். ஓஎன்ஜிசி ஊழியர் நாயர் போராட்டக்காரர்களுக்கு எதிராக வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஓஎன்ஜிசிக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications