திருச்சி தஞ்சையில் 104 டிகிரி கொளுத்தும் வெயில்: சென்னையில் 102 டிகிரியை தொட்டது
சென்னை: தமிழகத்தில் இன்று திருச்சி, தஞ்சையில் வெப்பநிலை 104 டிகிரி பதிவாகியுள்ளது. சென்னையிலும் வெப்பநிலை 102 டிகிரியை தொட்டுள்ளது.
கத்திரி வெயில் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பின்னர் தமிழகத்தில் வெப்பம் மண்டையைப் பிளக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது. தமிழ்நாட்டில் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் 4 நாட்கள் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதன்காரணமாக, வெப்பம் குறைந்து, எங்கு பார்த்தாலும் மழைநீராக காட்சியளித்தது.
தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை ஓய்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
அதிகபட்ச வெப்பநிலை
மழை ஓய்ந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. திருச்சி, தஞ்சை, விருதுநகரில் திங்கட்கிழமை 104 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் அதிகரித்த வெப்பம்
சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சதமடித்த வெயில்
வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அனைவரும் குடைபிடித்தும், துப்பட்டா, புடவை போன்றவற்றால் தலையை மூடியபடியும் நடந்து சென்றனர். மேலும் தொடர் மழையால் ஓய்ந்திருந்த வெள்ளரி, நுங்கு, கரும்புச் சாறு போன்றவற்றின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியது.
வேலூர், கிருஷ்ணகிரி
இதேபோல் வேலூர், கிருஷ்ணகிரியிலும் வெயில் 102 டிகிரியை தொட்டது பின்னர் வெயில் படிப்படியாக குறைந்தது. கோவை, திருப்பூர், உதகமண்டலம் என குளுமையான இடங்களில் கூட வெப்பநிலை 95 டிகிரியை தொட்டுள்ளது. ஆனாலும் உதகையில் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் சீசன்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக கோடை மழை நீடித்தது. விடாமல் பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக கொடைக்கானலில் 66 மி.மீட்டர் மழை பதிவானது. சூறாவளி காற்று வேகமாக வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் இருளில் தவித்தனர்.
களைகட்டிய சீசன்
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்ததால் வியாபாரிகள் திணறினர். நேற்று முதல் வெயில் அடிக்கத்தொடங்கியது. குளுகுளுசீசனுடன் ரம்மியமான சீதோஷ்ண நிலை கொடைக்கானலில் நிலவுகிறது.
எனவே வழக்கம்போல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் சீசன் மீண்டும் களைகட்டியுள்ளது.
பயணிகள் படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் ஆனந்தமாக படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டுகளித்து அதிசயித்தனர். இதேபோல குணா குகை, பேரிஜம் ஏரி, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குளிர்ச்சியை நாடும் மக்கள்
உதகை, கொடைக்கானல் தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களில் கத்திரி வெயிலின் சூடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து தப்பிக்க மக்கள் குளிர் பானங்கள் பழரசங்களை நாடி வருகின்றனர்.