ஆவடி அருகே கடத்தப்பட்ட குழந்தை ஆந்திராவில் மீட்பு: பணத்திற்காக கடத்திய 2 பொறியியல் பட்டதாரிகள் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தையை ஆந்திரா அருகே காவல்துறையினர் மீட்டுள்ளனர். பணத்திற்காக குழந்தையை கடத்தி நாடகம் ஆடிய இரண்டு பொறியியல் பட்டதாரி நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடியை அடுத்த அன்னனூர் சிவசக்தி நகர் 28-வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர், 28. இவர் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெய நந்தினி 22. இவர்களுக்கு மோகித் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது.
சங்கர் பெங்களூரில் வேலை பார்த்தாலும் ஜெய நந்தினி அன்னனூரில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சங்கர் விடுமுறை கிடைக்கும்போது அன்னனூர் வந்து மனைவி, குழந்தையை பார்த்துச் செல்வார்.
ஜெயநந்தினி குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மனோஜ், 22 என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். என்ஜினீயரிங் முடித்த அவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதோடு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க விண்ணப்பம் செய்து உள்ளார்.
பக்கத்து வீடு என்பதால் மனோஜ் அடிக்கடி சங்கர் வீட்டுக்கு வந்து குடும்ப நண்பர் போல பழகி வந்தார். சங்கர் குழந்தை மோகித்துடன் கொஞ்சி விளையாடுவார். அவனை வெளியே அழைத்துச் செல்வார்.
நேற்று மாலை மோகித்துடன் மனோஜ் விளையாடிக் கொண்டு இருந்தார். பின்னர் அவனது பாட்டியிடம் கூறிவிட்டு தனது நண்பரிடம் இருந்து வாங்கி வந்த காரில் ஏற்றி வெளியே அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக சங்கர் குடும்பத்தினரிடம் மனோஜ் கூறினார்.
குழந்தை கடத்தப்பட்ட செய்தி அறிந்ததும் ஜெய நந்தினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமுல்லைவாயில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனோஜ் கூறும்போது, ‘‘குழந்தை மோகித்துடன் காரில் திருமுல்லைவாயில் தனியார் பாலிடெக்னிக் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் காரை வழி மறித்து என்னையும், குழந்தை மோகித்தையும் எனது காரில் கடத்திச் சென்றனர். வெள்ளனூர் பிள்ளையார்கோவில் அருகே வரும்போது என்னை காரில் இருந்து தள்ளிவிட்டு குழந்தை மட்டும் காருடன் கடத்திச் சென்று விட்டனர்'' என்றார்.
குழந்தை கடத்தப்பட்ட செய்தி அறிந்ததும் ஜெயநந்தினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர்.
திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனோஜிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை முடுக்கினர்.
இதையடுத்து காவல்துறையினரின் நடத்திய தொடர் விசாரணையின் போது முதலில் மறுத்த மனோஜ் இறுதியில் தானே குழந்தையைக் கடத்தியதை ஓப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் குழந்தை மோஹித்தை காவல்துறையினர் மீட்டனர். இந்த விவகாரத்தில் மனோஜ் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது குழந்தை மோகித்தை தனது நண்பர் குமரவேல் 26 என்பவருடன் சேர்ந்து கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.
மனோஜ் போலீசில் கூறுகையில், ‘‘என்ஜீனியரிங் முடித்த தனக்கும், குமரவேலுக்கும் வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க விரும்பினோம். அதற்கு ரூ.1.5 லட்சம் பணம் தேவைப்பபட்டது. சாப்ட்வேர் என்ஜீனியரான சங்கர் வசதியுடன் இருப்பதால் அவரது குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டோம்'' என்றார். குழந்தையுடன் குமரவேல் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரியவந்தது. திருமுல்லைவாயில் போலீசார் ஆந்திரா சென்று குமரவேலுவை இன்று அதிகாலை கைது செய்தனர். குழந்தை மோகித்தையும் பத்திரமாக மீட்டனர்.
கைதான குமரவேல் கவரப்பட்டுவைச் சேர்ந்தவர். என்ஜீனியரிங் முடித்து உள்ளார். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.