சிம்லா முத்துசோழனுக்கு சீட் ஏன் கிடைக்கலை தெரியுமா? அதிரவைக்கும் 'பகீர்' காரணங்கள்!
ஆர்கே நகர் தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு மீண்டும் திமுகவில் வாய்ப்பு தரப்படாததன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சீட் கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு இருந்த சிம்லா முத்துசோழனுக்கு திடீரென சீட் கிடைக்காததன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றவர் சிம்லா முத்துசோழன். மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் என்ற காரணத்துக்காக சீட் கொடுக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
சிம்லா பிஸி
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட சிம்லா முத்துசோழன் விரும்பினார். இதற்காக ஆர்.கே.நகரில் கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவ முகாம்கள், கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தார்.
செல்வாக்கை நம்பி...
ஆனால் திமுகவில் சிம்லா முத்துசோழனுக்கு மீண்டும் சீட் கிடைத்தால் தோல்வி நிச்சயம் என சீனியர்கள் புலம்ப தொடங்கினர். சிம்லா முத்துசோழனோ தமக்கு இருக்கும் 'செல்வாக்கால்' சீட் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார்.
அடுப்படி அமைச்சரவை
திமுகவைப் பொறுத்தவரை பல முக்கிய முடிவுகளை 'அடுப்படி'கள்தான் தீர்மானிக்கின்றன என்பது அக்கட்சியினர் பலருக்கும் தெரியும். தற்போதும் ஆர்கே நகர் வேட்பாளர் யார் என்ற தீவிர ஆலோசனையில் அடுப்படி அமைச்சரவை ஈடுபட்டது.
இதனால்தான்..
ஒருவேளை சிம்லா வென்றால் 'செல்வாக்கு' உயர்ந்துவிடும் என்பது உள்ளிட்ட "பல" விஷயங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தே அவரை நிராகரித்தாக வேண்டும் என முடிவில் இருந்ததாம் அடுப்படி அமைச்சரவை. இதை சற்றும் எதிர்பார்க்காத சிம்லா முத்துசோழன் எதிர்ப்பை வேறுவகையில் தெரிவிக்க தொடங்கிவிட்டாராம்.