கொடைக்கானல்: மாணவர்களை பிரம்பால் அடித்த ”பிசிக்ஸ்” ஆசிரியரை புரட்டி எடுத்த பெற்றோர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் பள்ளி ஒன்றில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியரை வெளியே விடக் கோரி மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆசிரியரையும் காயமடையும் வகையில் தாக்கினர்.
கொடைக்கானல் அருகே செண்பகனூரில் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான வெளியூர் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதால் அந்த பள்ளியில் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.
இந்த பள்ளியில் தற்போது நடந்து முடிந்த பிளஸ்2 இயற்பியல் பாடத் தேர்வில் 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தனர். இதனை அறிந்த இயற்பியல் ஆசிரியர் அந்தோணிசாமி மாணவ, மாணவிகளை எச்சரித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஆசிரியரான இவர் பிரம்பால் 14 மாணவர்கள், 4 மாணவிகளை சரமாரியாக அடித்தார். வேதனைதாங்காமல் மாணவிகள் அலறி துடித்தனர். உடனடியாக சக பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
நடந்த விபரம் குறித்து மாணவிகள் உள்ளூரில் உள்ள தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். மாணவிகள் உடலில் பிரம்பு அடிபட்ட இடத்தை பார்த்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபம் கொண்ட பெற்றோர்கள் அங்குள்ள மக்களை ஒன்றுதிரட்டி பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆசிரியர் அந்தோணிசாமியை வெளியே வரும்படி கூச்சல் போட்டதால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் அந்தோணிசாமியை ஒரு அறையில் பத்திரமாக அடைத்து வைத்த பின்னர் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்..
இந்த தகவல் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கும் எட்டியது. இதனை கேள்விபட்டு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ சுரேஷ் விரைந்து வந்தார்.
அவர் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தும் அவர்களது கோபம் தீரவில்லை. தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால் ஆசிரியர் அந்தோணிசாமி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.
உடனே ஆசிரியர் அந்தோணிசாமி பள்ளியில் இருந்து அழைத்து வரப்பட்டார். ஆசிரியரை கண்டதும் பெற்றோர்கள் கொந்தளித்தனர். அவர்கள் ஆசிரியர் அந்தோணிசாமியை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உஷாரான பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு வேனில் அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களிடம் தெரிவிக்கையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனாலும் பெற்றோர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் அந்தோணிசாமியை கைது செய்தனர்.
இந்த விபரத்தை போராட்டம் செய்த பெற்றோர்களிடம் போலீசார் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பெற்றோர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.