கொள்ளையர்கள் யார்? கொடநாடு எஸ்டேட்டில் உயிர் தப்பிய காவலாளியிடம் துருவி துருவி போலீஸ் விசாரணை!
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் காயமடைந்த மற்றொரு காவலாளியிடம் குற்றவாளிகள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் காயமடைந்த மற்றொரு காவலாளியிடம் குற்றவாளிகள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நேற்று அதிகாலை காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
கொடநாடு பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவின் அறைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொடநாட்டுக்கு பொலிரோ ஜீப்பில் வந்து கொலை, கொள்ளை நிகழ்த்திய மர்ம நபர்கள் குறித்து மருத்துவமனையில் உள்ள கிருஷ்ணபகதூரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.