கொடநாடு பங்களாவில் கொள்ளை போன ஜெ. வாட்ச்சுகள் இங்கே இருக்கு.. பணம், ஆவணங்கள் எங்கே?
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாட்ச்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ள நிலையில் பணம், முக்கிய ஆவணங்கள் என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட கை கடிகாரங்களை விபத்தில் சிக்கிய சயனின் காரில் இருந்து போலீசார் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முக்கிய ஆவணங்கள், பணம் என்னவானது என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த கொலை, கொள்ளை வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24ஆம் தேதி காவலுக்கு இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளியை தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட் களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவத்தில் போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் என்பவர்தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும், அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் ஏற்பாட்டின் பேரில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 11 பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
கார் டிரைவர் கனகராஜ்
டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் மோதி மர்மமான முறையில் பலியானார். இதற்கிடையே கனகராஜின் நண்பரான சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார். வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயலலிதா வாட்ச்
சயனின் காரை சோதனை செய்தபோது, அதில் எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த கைக்கெடிகாரங்கள், பளிங்கு கல்லால் ஆன காண்டா மிருகம் ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.
சயனை கைது செய்ய முடிவு
சயன் சென்ற காரின் நம்பர் பிளேட்டும் போலியானது என்று தெரியவந்தது. இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயனுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பெறும் சயன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், குணம் அடைந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கூலிப்படையினர்
சயனுக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், சாமியார் மனோஜ் என்பவரின் உதவியுடன் கூலிப்படை அமைத்து இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
11பேர் கொண்ட கும்பல்
கனகராஜூம், சயனும் கடந்த 20 நாட்களுக்கு முன்பே திருச்சூர் சென்று ஹவாலா கும்பலின் முக்கிய புள்ளியும் சாமியாருமான மனோஜ் என்பவரை சந்தித்து பேசினர். அவர் வகுத்து கொடுத்த திட்டத்தின் படி 3 கார்களில் 11 பேர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
4 பேருக்கு சிறை
இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார் ஆகிய 4 பேரை அங்கு நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை மூலம் கிடைக் கும் பணத்தில் பங்கு தருவதாக மனோஜ் ஆசை காட்டியதால் அவருடன் வந்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.
கொள்ளை நடந்தது எப்படி?
சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார் ஆகிய 4 பேரையும் நீலகிரி மாவட்ட போலீசார் நேற்று கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா பங்களாவுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் எஸ்டேட் பங்களாவுக்கு அவர்கள் எந்த வழியாக வந்தனர்? காவலாளி ஓம்பகதூரை கொன்றது எப்படி? மற்றும் பங்களா அறைகளில் புகுந்தது குறித்து சுமார் 2 மணி நேரம் நடித்து காட்டினர். அதை அப்படியே போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
கோவை சிறையில் அடைப்பு
பின்னர் 4 பேரையும் போலீசார் குன்னூர் மாஜிஸ்திரேட்டு சுந்தரராஜன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் 4 பேரையும் கோவை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இரவில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் மலப்புரத்தில் திருச்சூரை சேர்ந்த ஜிதின்ராய், வயநாடு பகுதியைச் சேர்ந்த ஜம்ஷீர் அலி ஆகிய 2 பேரை ஒரு மோசடி வழக்கில் கேரள மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை- கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கார் பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். கேரளாவில் கைதான ஜிதின் ராய், ஜம்ஷீர் அலி ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
பின்னணி என்ன?
கார் டிரைவர் கனகராஜை, பின்னணியில் இருந்து கட்சி பிரமுகர் யாராவது இயக்கினார்களா? என்று விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக கனகராஜ் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பணம் ஆவணங்கள் எங்கே?
கொடநாடு பங்களாவில் இருந்து பலகோடி ரூபாய், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போயுள்ளன. பங்களாவில் இருந்த பொருட்கள் பற்றி சசிகலா, ஜெயலலிதாவிற்கு மட்டுமே தெரியும் என்பதால் கொள்ளை போன பொருட்கள், ஆவணங்கள் என்ன என்பதை அறிவதில் சிக்கல் நீடிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.