நெருங்கிறது பொங்கல் பண்டிகை... போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கிற்கு தீர்வு தேவை.. கொ.ம.தே.கட்சி
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடந்தால் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது. நேற்றையதினம் போக்குவரத்துத்துறை அமைச்சர் தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியாக சொல்கிறார். இத்தனைமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிற்சங்கங்கள் உடன் படாதது தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
உயர்நீதிமன்றமும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்க முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு எல்லாம் காரணம் போக்குவரத்துத்துறையை சரிவர கவனிக்காமல் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தியது தான்.
இன்னும் இரண்டு தினங்களில் பொங்கல் பண்டிகைக்காக இலட்சக்கணக்கான மக்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கிறார்கள். சென்னையிலிருந்து சேலம், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அன்றாடம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் சிறப்பு பேருந்துகள் சரிவர இயக்கினாலும் பேருந்துகளில் கூட்டம் குறையாமல் இருக்கும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பொங்கலுக்கு தலைநகரிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துகள் ஆங்காங்கே நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக முதல்வர் அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.