ஆடி திருவிழாவில் கண் திறந்த அம்மன் சிலை... கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக கூறப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 3வது செக்கடி தெருவில் 24 மனை தெலுங்குபட்டி செட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் 14ம் ஆண்டு ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி தட்கால் நடுதலுடன் விழா தொடங்கியது.
ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்து வருகிறது. இந்நிலையில் இரவு 8.30 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கோயில் பூசாரி சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அம்மன் சிலை திடீரென கண் திறந்து பார்த்ததாக பூசாரிக்கு தோன்றவை அதனை அங்கிருந்த பக்தர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கோயில் அருகே திரண்டிருந்த பொதுமக்களும், பக்தர்களும் அம்மன் கண் திறந்த காட்சியை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பெண்கள் அங்கேயே குலவையிட்டு வழிபாடு நடத்தினர். இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு நிலவி வருகிறது.
விநாயகர் சிலை பால் குடித்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல வேப்பமரத்தில் பால் வடியும் சம்பவங்கள் சில இடங்களில் நிகழும். அடிக்கடி பல கோவில்களில் அம்மன் சிலைகள் கண் திறப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இப்போது ஆடி திருவிழாவில் அம்மன் சிலை கண் திறந்தாக பூசாரி கூறியதால் முத்துமாரியன் கோவில் தற்போது திடீர் சுற்றுலாதலமாக மாறியுள்ளது.