குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா! பக்தர்கள் விரதம் தொடக்கம்
குலசேகரப்பட்டிணத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் தசரா திருவிழாவில் நேர்த்தி கடனை செலுத்த பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.
நெல்லை: குலசேகரப்பட்டிணத்தில் வரும் செப் 30ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த விரதம் தொடங்கியுள்ளனர்.
மைசூருவுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வேடம் அணிய விரதம் இருப்பர்.
இந்தாண்டு குலசேகரப்பட்டிண் தசரா விழா செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கோயிலில் கொடி ஏற்றப்படும். செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்பு அம்மன் கடற்கரை வாளகத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்.
இந்த விழாவை ஒட்டி வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர். அவர்கள் காலையில் நீராடி விட்டு செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்து அம்மன் காலில் மாலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் மாலை சிறப்பு பூஜை நடத்தி கோயில் பட்டர் அந்த மாலைளை விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அணிவித்தார். விரதம் இருக்கும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் கோயிலிலோ அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடிசை அமைத்து அங்கேயே சமைத்து ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடுகின்றனர்.
தசரா விழாவில் வேடம் அணியும் பக்தர்கள் யானை, புலி, குரங்கு, சிறுத்தை, பெண், பாதிரியார், சிவன், பார்வதி, நரசிம்மர், காளி, அனுமன், அரசியல் பிரமுகர்கள் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த வேடங்கள் அனைத்தும் ரூ.1000 முதல் ரூ.10000 வரை அங்குள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.