குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணத்தில் முத்தாரம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதையொட்டி பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் தசரா திருவிழா நடப்பது வழக்கம்.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்து தசரா திருவிழாவுக்கு பெயர் போனது குலசேகரன் பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில். இங்கு நடைபெறும் தசரா விழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வது வாடிக்கை.
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதனைக் காண பத்து லட்சம் பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் நெல்லை, கன்னியாகுமாரி, மாவட்டங்களைச் சேர்ந்த ஊர் காவல் படையினரும் சேர்த்து ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குற்றப்பிரிவு காவல்துறையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
தசரா திருவிழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் உடன்குடி வழியாகவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.