மதுரை ரயில் கோட்டத்துடன் நாகர்கோவிலை இணைக்கும் திட்டம் இல்லை: பொன் ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி-மதுரை இரட்டை ரயில் பாதை பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை கோட்டத்துடன் நாகர்கோவிலை இணைக்கும் திட்டம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் நடைபெறும் ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, திருவனந்தபுரத்தில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் நாகர்கோவில் வந்தார்.
நாகர்கோவிலில் உள்ள பொது பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். ரயில்வே பணிகள் குறித்து சுமார் இரண்டு மணி நேரம் இருவரும் ஆலோசனை செய்தனர். இதன்பிறகு இருவரும் கோட்டாறு ரயில்வே நிலையத்துக்கு சென்று பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகத்திற்கு தேவையான பல முக்கிய ரயில் திட்டங்கள் தொடர்பாக பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராவிடம் ஆலோசனை நடத்தினேன்.
குறிப்பாக சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை டெர்மினல் ரயில் நிலையமாகத் தரம் உயர்த்துவது, கன்னியாகுமரி-மதுரை இரட்டை ரயில் பாதை பணி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை ரயில் வழித்தடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை வழித்தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.