கனமழையால் பட்டியில் இருந்து வெளியேறிய 150 ஆடுகள் ரயில் மோதி பலியான பரிதாபம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரவு நேரத்தில் கனமழை காரணமாக பட்டியில் இருந்து வெளியேறிய சுமார் 150க்கும் அதிகமான ஆடுகள் ரயில் அடிபட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் திருவிடை மருதூர் அருகே விசுவநாதபுரம் உள்ளது. இக்கிராமத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்தானம், கடலூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான சுமார் 350 செம்மறி ஆடுகளை வயல் வெளியில் மேய்த்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல மேய்ச்சலுக்குப் பிறகு ஆடுகளை வயல் வெளியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சந்தானமும், கோபால கிருஷ்ணனும் தூங்க சென்றுவிட்டனர்.
நேற்றிரவு கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பட்டியில் இருந்து வெளியே வந்த ஆடுகள் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இருந்துள்ளது. அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இந்த ஆடுகள் மீது மோதியது.
இந்த விபத்தில் சுமார் 150 ஆடுகள் பலியானது. 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆடுதுறை வரை இழுத்து செல்லப்பட்டு தண்டவாளத்தின் இருப்புறங்களிலும் ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. பலியான ஆடுகளின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த சந்தானமும், கோபால கிருஷ்ணனும் பலியான ஆடுகளைப் பார்த்துக் கதறி அழுதனர்.
இந்த விபத்துத் தொடர்பாக ரயில்வே இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications