விருந்துக்கு வாங்க மாப்ள! காதல் பட பாணியில் திருமணமான 5 நாளில் ஆணவ கொலை.. குலுங்கிய கும்பகோணம்!
கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்ற ஆணவ கொலை ஒன்று தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. காதல் பட பாணியில் அரங்கேறி உள்ள இந்த கொலை மக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் ஆகி 5 நாட்களில் நடந்த இந்த கொலை கும்பகோணத்தை உலுக்கி உள்ளது.
Recommended Video
நடிகர் பரத், நடிகை சந்தியா நடிப்பில் வெளியான காதல் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஜாதி மீறி திருமணம் செய்யப்பட்ட தம்பதிகளை ஏற்றுக்கொள்வதாக பொய் சொல்லி கடைசியில் பெண்ணின் பெற்றோர் ஹீரோவை அடித்து பைத்தியம் ஆக்குவதுதான் கதை.
அதேபோல் மராத்தியில் வெளியான சாய்ராத் படத்திலும், ஜாதி மீறி திருமணம் செய்த தம்பதிகளை பெண்ணின் சகோதர்கள் கொல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒரு சம்பவம்தான் நிஜத்தில் கும்பகோணத்தில் அடைந்துள்ளது.

கும்பகோணம் கொலை
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரின் பெற்றோர் பெயர் சேகர் - தேன்மொழி. இவர்கள் (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். வறுமையான பின்னணியை கொண்டவர்கள். சரண்யாவிற்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். சரண்யா நர்சிங் படித்துள்ளார். சென்னையில் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்குதான் மோகன் என்ற இளைஞருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

காதல் கதை
அந்த மருத்துவமனைக்கு பிசி பிரிவு சாதியை சேர்ந்த மோகன் (26) என்ற இளைஞர் தனது அம்மாவின் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். ஜாதி கேட்காமல், அதை பற்றி கவலை இன்றி காதலித்து வந்துள்ளனர். வீட்டில் எப்படியாவது காதலை சொல்லி ஏற்றுக்கொள்ள வைத்துவிடலாம் என்று மோகன் நம்பி இருக்கிறார். ஆனால் வீட்டில் காதலை சொன்ன போது மோகன் வீட்டினர் அதை எதிர்த்து உள்ளனர்.

திருமணம்
வீட்டில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இவர்கள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துள்ளனர். பெண்ணின் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டதாக கூறிய நிலையில் சரண்யா வீட்டிற்கு சென்று மோகன் விருந்து சாப்பிட்டுள்ளார். எங்க வீட்டிற்கு வாங்க.. அதெல்லாம் பார்த்துக்கலாம் மாப்பிள்ளை என்று நம்பிக்கை வார்த்தை கூறி அழைத்துள்ளனர். இவர்களும் நம்பி சென்றுள்ளனர்.

சென்னை செல்ல பிளான்
இருவருக்கும் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. மச்சான்கள் நட்பாக பேசியதை பார்த்து மோகனும் நிம்மதி அடைந்துள்ளார். அடுத்து சென்னை சென்று தன் அம்மாவை சமாதானம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்த நேரத்தில்.. திடீரென சரண்யா - மோகன் இருவரும் சாப்பிட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியே வரும் போது, அறைக்குள்ளேயே வைத்து, மோகனை சரண்யாவின் சகோதரர்கள் சக்திவேல், ரஞ்சித் சராமரியாக வெட்டி உள்ளனர். அந்த பெண்ணின் முறை பையன் ஒருவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

சரமாரி தாக்குதல்
அங்கேயே மோகனை வெட்டிக் கொன்ற சக்திவேல், ரஞ்சித் பின்னர் சரண்யாவை துரத்தி சென்று சாலையில் வைத்து வெட்டி உள்ளனர். சாலையில் பட்டப்பகலில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இருவரையும் கொலை செய்த சரண்யாவின் சகோதர்கள் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் சோழபுரம் போலீசார் இதை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தம்பதியை கொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகியோர் போலீசில் சரண் அடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications