கும்பகோணம் பள்ளி தீ விபத்து: விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு ஹைகோர்ட் கிளை நோட்டீஸ்
மதுரை: கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட நீதிமன்றம் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவி சரஸ்வதி உள்பட 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

மேலும் இந்த வழக்கில் இருந்து முன்னாள் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்ற பழனிச்சாமி மற்றும் சிறை தண்டனை பெற்றவர்கள் அனைவரும் மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் 11 பேரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் செல்வம், ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதன்படி விடுதலை செய்யப்பட்ட தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முன்னாள் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பள்ளி ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி முன்னாள் ஆணையர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகரமைப்பு அதிகாரி முருகன் ஆகிய 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications