மயங்கி விழுந்த 10 வயது மாணவன்.. சாப்பிட்டது கெட்டுப் போன நூடூல்ஸா?
குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே திருச்சோபியூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் திடீரென மயக்கமடைந்து விழுந்தான். நூடூல்ஸ் சாப்பிட்ட பின்னர் அவன் மயங்கி விழுந்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவனின் பெயர் அருண் குமார். 10 வயதாகும் இவன், 5ம் வகுப்பு படித்து வருகிறான். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் இவன் நூடூல்ஸ் சாப்பிட்டுள்ளான். சாப்பிட்டதும் அவனுக்கு வாந்தி, மயக்கம் வந்தது. மேலும் வலிப்பும் வந்தது.
இதையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்கு அவனைக் கூட்டிச் சென்றனர். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவனை அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜாவுக்கும் தகவல் போய் அவரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள் வரிசையில், இந்த மாணவன் சாப்பிட்ட நூடூல்ஸ் வகை வரவில்லை. இந்த நூடூல்ஸ் வாங்கப்பட்ட கடையில் சோதனை நடத்தி அங்கு ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த 714 நூடூல்ஸ் பாக்கெட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இதை சோதனை செய்து பார்த்த பின்னர்தான் காரணம் குறித்துத் தெரிய வரும் என்றார்.
தற்போது மாணவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.