கலைஞர் என் தந்தை மாதிரி.. வேறு கட்சிக்கு போகும் ஐடியா இல்லை!- குஷ்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி என் தந்தை மாதிரி. இப்போதைக்கு திமுகவிலிருந்து விலகினாலும், வேறு கட்சிக்கு தாவும் எண்ணம் ஏதுமில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுகவின் நட்சத்திர பேச்சாளராகத் திகழ்ந்தவர் குஷ்பு. ஆனால் அவர் கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடித்தன. குறிப்பாக முக ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரை வெளிப்படையாகவே எதிர்த்தனர். திருச்சியில் அவர் காரை மறித்ததெல்லாம் நடந்தது.
ஆனாலும் குஷ்பு அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் கடந்த தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில், திமுகவுக்கான தன் உழைப்பு வீணாகிவிட்டதாகக் கூறி நேற்று அக்கட்சியிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டார்.
ட்விட்டரில்
இந்த முடிவை அவர் அறிவித்த பிறகு, அவருக்கு ட்விட்டரும் தொலைபேசியிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். நலம் விசாரித்தனர். அவர்களுக்கு பதில் தரும் விதமாக தான் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ட்விட்டரில் அடுத்தடுத்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார் குஷ்பு.
|
தனியா விடுங்க
ஒரு ட்விட்டில், 'இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி. மீடியா மற்றும் நண்பர்கள் என்னைத் தனிமையில் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. வீட்டுக்கு வெளியே நிற்கும் பத்திரிகையாளர்கள் கிளம்பிச் செல்லலாம். காரணம் நான் வெளிநாட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
|
வேறு கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை
இன்னொரு ட்வீட்டில், 'நான் வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை. எனவே உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டாம். என் குடும்பத்துடன் சில காலம் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
|
கலைஞர் என் அப்பா
அடுத்த ட்வீட்டில், "கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது," என்று கூறியுள்ளார்.
|
பிரஸ்ஸுக்கு நன்றி
"என்னையும் என் முடிவையும் புரிந்து கொண்டு மதிப்பளித்த பிரஸ்ஸுக்கு நன்றி. நிச்சயம் ஒரு நாள் அவர்களுடன் பேசுவேன்," என்று இன்னொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார் குஷ்பு.
|
என் மகள்கள்தான் உலகம்...
மேலும் சில ட்வீட்கள்... "திமுகவிலிருந்து விலகும் முடிவை அரைமனசோடு எடுக்காமல், இப்போதாவது எடுக்க முடிந்ததில் சந்தோஷம். அங்கு இருந்த வரை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்தேன். இனி என் மகள்கள்தான் உலகம்".
|
கலைஞரை அன்ஃபாலோ பண்ணேனா...
சிலர் நான் கலைஞரை @kalaignar89 ட்விட்டரில் அன்ஃபாலோ செய்ததாக கூறியுள்ளனர். எப்படி கண்மூடித்தனமாக இப்படி சொல்கின்றனர். நான் ஒருபோதும் அவரை அன்ஃபாலோ செய்யவில்லை. நல்லா கண்ணாடி போட்டுக்கிட்டு பாருங்கள்...
|
முட்டாள்களை விட ஆதரவாளர்கள்
என்னை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் காதற்ற முட்டாள்களை விட, எனக்குப் பின்னால் ஒரு சுவர் போல நிற்கும் ஆதரவாளர்கள் அதிகம். நான் இன்னும் உயர உயர எழும்பி நிற்பேன்.
-இந்த ரேஞ்சில் இன்னும் சில ட்வீட்களை குஷ்பு பதிவு செய்துள்ளார்.