செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு "ஷேக் ஹேண்ட்" கொடுத்து வாழ்த்திய காங். தலைவர்கள்!
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவருக்கு காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், நிர்வாகிகள் கோபண்ணா, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, செல்வம், ஜோதி, தணிகாசலம், முருகானந்தம், மணிபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "பத்திரிகையாளர் சந்திப்புக்கு தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னிக்கவும். இந்திய குடிமகளாகிய நான் வரும் வழியில் ஆம்புலன்சுக்கு வழி கொடுக்கும் போது ஏற்பட்ட தாமதமே அதற்கு காரணம்.
என்னை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்று இளங்கோவன்தான் ஆசைப்பட்டார். அவருடைய ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்காது. அவர் இப்போது ஊரில் இல்லை. போன் மூலம் அவரிடம் நன்றி தெரிவித்தேன்.
காங்கிரசுக்கு வந்த 5 மாதத்தில் இந்த பதவி எனக்கு கிடைத்துள்ளது. இதில் அனைவரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. தமிழக காங்கிரசில் உள்ள மூத்த உறுப்பினர்கள் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக கவனித்துக் கொண்டார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து பேசினார்.
கேள்வி: தமிழக காங்கிரசில் இளங்கோவன் அணி, ப.சிதம்பரம் அணி என 2 அணிகள் செயல்படுகிறதே?
பதில்: உங்கள் கண் பார்வைக்கு அப்படி தெரிகிறது. தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாமல் சிதம்பரம் கூட்டம் நடத்தவில்லை. எங்களை பொறுத்தவரை ஒரே அணி தான். அது காங்கிரஸ் தான். காங்கிரஸ் இல்லாமல் யாரும் இல்லை.
கேள்வி: குறுகிய காலத்தில் எதன் அடிப்படையில் இந்த பதவி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?
பதில்: காங்கிரசை முன்னிலைக்கு கொண்டு செல்ல என்னால் முடியும் என்று சோனியாவும் மற்ற தலைவர்களும் கருதியதன் அடிப்படையில் இந்த பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.
பேசக்கூடிய திறமையும் இருப்பதால் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கேள்வி: காமராஜரை பற்றி கார்த்தி சிதம்பரம் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: காங்கிரசையும், காமராஜரையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. காங்கிரஸ் பற்றி பேச வேண்டுமானால் காமராஜரைப் பற்றி பேச வேண்டும். இரண்டுமே ஒன்று தான்.
கேள்வி: மக்கள் பிரச்சினைகளை காங்கிரஸ் எடுத்து சொல்வதில் பின் தங்கியுள்ளதே?
பதில்: காங்கிரஸ் ஆட்சி மக்கள் பிரச்சினைகளுக்காக 130 ஆண்டுகளுக்கு முன்பே போராடி வருகிறது. மக்கள் பிரச்சினைக்காக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காங்கிரஸ் பல போராட்டங்களை சந்தித்துள்ளது. தொடர்ந்து வீதிக்கு வந்து போராட தயாராக இருக்கிறேன்.
கேள்வி: காங்கிரசை வலுப்படுத்த உங்களால் முடியுமா?
பதில்: இப்போது தான் எனக்கு இந்த பதவி கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் தலைவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
கேள்வி: நீங்கள் தி.மு.க.வில் பதவி தரவில்லை என்பதால் காங்கிரசுக்கு வந்தீர்களா?
பதில்: அது தவறு. எனக்கு எப்போதும் தி.மு.க. தலைவர் கலைஞர் மீது அன்பு, பாசம் உண்டு. அது என்றும் மாறாது.
கேள்வி: தமிழக பட்ஜெட் எப்படி உள்ளது?
பதில்: இதுவரை அதை படித்து பார்க்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது.