அழகிரி பிறந்தநாள்தான்.... அமளி துமளி, ஆரவாரமில்லாமல் மதுரையில் கொண்டாட்டம்!
சென்னை: மதுரை குலுங்க... குலுங்க அழகிரியின் 65வது பிறந்தநாளை கொண்டாடும் அவரது ஆதரவாளர்கள் இந்த ஆண்டு எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிறந்தநாள் கொண்டாடப்போவதில்லை என்று அழகிரி அறிவித்திருந்தார் அதன்படி ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளருமாக இருந்த மு.க.அழகிரி, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாடுவது வழக்கம். ஜனவர் 30-ம் தேதிக்கு முன்பாகவே மதுரையை அடைத்து போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் வைத்து கலக்கி விடுவார்கள். பிறந்தநாள் தினத்தில் வீட்டில் கேக் வெட்டிய கையோடு மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் தனது ஆதரவாளர்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவார் மு.க. அழகிரி. ஆனால், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் குறித்து எவ்வித ஏற்பாடும், தகவலும் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மு.க. அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், என் மீது அன்பும், பாசமும், கொண்ட நண்பர்களுக்கும், ஆதரவா ளர்களுக்கும், தம்பிமார் களுக்கும் வேண்டுகோள். தமிழகம் முழுவதும் இருந்து, இந்த ஆண்டு எனது பிறந்தநாள் மதுரையிலா, சென்னையிலா என்று விசாரித்த வண்ணம் உள்ளீர்கள்.
மேலும், ஊடகங்களும் எனது பிறந்தநாள் குறித்து பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆண்டு, சமீபத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜன. 30ம் தேதி எனது பிறந்தநாளை எங்கும் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் என் நண்பர்களும், ஆதரவாளர்களும், தமிழகம் முழுவதும் தொடர்ந்து எனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். உங்களின் வாழ்த்துகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். எனினும், அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகர் முழுவதும் அவரை வாழ்த்தும் விதமாக சுவரொட்டி ஒட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்தும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தெறிக்க விடப்போவதாகவும் போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அழகிரியின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.