ஓபிஎஸ் மீது புகார்... ஆதரவாளர்களுடன் மல்லுக்கட்டிய ஊர்மக்கள்: வீடியோ
நிலத்தடி நீரை உறிஞ்சி, மற்ற விவசாயிகளை பிழைக்க விடாமல் செய்கிறார் என முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் மீது பொதுமக்கள் புகார் கூறியதால் பரபரப்பு உண்டானது.
தேனி: அதிகசக்தி கொண்ட மோட்டரை நிறுவி நீரை உறிஞ்சுவதால் மற்ற விவசாய நிலங்களுக்கு நீர் கிடைப்பதில்லை என முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மீது லட்சுமிபுரம் கிராம மக்கள் புகார் கூறியதால், கிராமசபை கூட்டத்தில் மோதல் உண்டானது.
பெரியகுளம் அருகில் உள்ளது லட்சுமிபுரம் கிராமம். இங்கு நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவளர்களுக்கும் கிராம நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
லட்சுமிபுரம் கிராமத்தில் பல ஏக்கர் நிலங்களை முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பினாமிகளின் பெயரில் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நான்கு கிணறுகளைத் தோண்டி, மூன்று மோட்டர்களை வைத்து நீரை உறிஞ்சுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், 60 எச்.பி திறன்கொண்ட மோட்டரை வைத்து நிலத்தின் அடியாழத்தில் நீரை உறிஞ்சிக்கொள்வதால் மற்ற நிலங்களுக்கு நீர் கிடைப்பதில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர். கிராம நிர்வாகிகளுக்கும் ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் உருவானதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.