கொடநாடு செல்ல திட்டமிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டு சிறை
சென்னை: கொடநாடு சென்று முதல்வரின் வீட்டு முன்னர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தையுடன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நந்தினி. தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து மதுக்கடைகளை மூடக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மாணவி நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் கொடநாட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, நந்தினியும் அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் புதன்கிழமை காலை கோத்தகிரியில் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோத்தகிரி காவல் துறையினர் நந்தினி, ஆனந்த் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு அங்கிருந்து குன்னூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு, அவர்களுக்கு காவல் துறையினர் உணவு அளித்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமையன்று இரவு விடுவித்தனர்.
இதுகுறித்து, நந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்டமிட்டபடி வரும் நவம்பர் 1ம் தேதி கொடநாட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். பூரண மதுவிலக்கை தமிழக அரசு அறிவிக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று கூறிய நந்தினி மதுரைக்கு திரும்பினார்.
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சனிக்கிழமையன்று இரவு அவர் தன் தந்தையுடன் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார் நந்தினி. இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர்.
டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications