ஜெயலலிதா பேச்சு.. கருணாநிதி சிரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் மீனவர்களின் கைது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: நாகைக்கு அருகே இந்திய மீனவர்கள் 100க்கு மேற்பட்டவர்களை, இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறதே?
இதில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
கேள்வி: மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண 2 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுகிற கூட்டத்தை ஏற்பாடு செய்யப் போவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்களே?
அந்த சந்திப்பு கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. அந்த கூட்டத்தை முதலில் நடத்தட்டும்.
கேள்வி: இலங்கைக் கடற்படை மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறது. மீனவர்கள் சந்திப்பு பற்றி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும் சொல்லியிருந்தார்களே?
பத்திரிகைகாரர்களுக்கு துணிவு இருந்தால், இதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கலாமே.
கேள்வி: மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக சொல்லியிருக்கிறாரே?
சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
கேள்வி: சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் நடக்காமல் பாதுகாத்துக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் சொல்லியிருக்கிறாரே?
சாதிக் கலவரங்கள் தமிழகத்தில் நடந்ததா, இல்லையா என்பது உங்களுக்கே தெரியும். பரமக்குடியில் நடந்ததும் சாதிக் கலவரம்தான், தருமபுரியில் நடந்ததும் சாதிக் கலவரம்தான், நடக்கவில்லை என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?
கேள்வி: விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. சமையல் எரிவாயு விலையை இன்று உயர்த்தியிருக்கிறார்கள். இந்த உயர்வு தொடர்ந்து கொண்டே போகிறதே?
திமுக ஆட்சியில் இருந்திருந்தால், முதல்வர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பார். அவருக்கு இப்போது யார் சொல்வது?
கேள்வி: நாடாளுமன்றத்தில் கச்சத் தீவு பிரச்னைக்காக திமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். இதற்கு மத்திய அரசு ஆதரவு தர முன்வராவிட்டால், அந்த அரசுக்கு எதிராக தெலுங்கானா பிரச்னையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது அரசை எதிர்த்து திமுக வாக்களிக்குமா?
சில பிரச்னைகளில் திமுகவை பொறுத்தவரை கடைபிடிக்கும் அணுகுமுறைக்கும் நாடாளுமன்றத்தில் தெலுங்கானா பிரச்னைக்காக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அது வேறு பிரச்னை இது வேறு பிரச்னை.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மனுக்களை வாங்குகின்ற பணியை அதிமுக தொடங்கி விட்டது. திமுக திட்டம் என்ன?
திமுக பொதுக்குழு கூடுகிறது. நீங்கள் கேட்பது பற்றி அன்றைக்கே அல்ல அதற்குப் பிறகு இதைப் பற்றி அறிவிப்போம்.