தமிழக சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க இதை விட ஒரு சம்பவம் தேவையா?
ஜெயலலிதாவுடன் தொடர்புடைய ஒரு இடத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளது, அதுவுதும் அதே கட்சி ஆட்சியில் என்பது மிகப்பெரிய வெட்கக்கேடான சம்பவம்.
சென்னை: தமிழகத்தில் அம்மா (ஜெயலலிதா), ஆட்சி நடப்பதாக நொடிக்கு நூறுமுறை, மாநில முதல்வர் உட்பட தமிழக அரசு இயந்திரம் முழுக்க கீறல் விழுந்த ரெக்கார்டு போல கூறிவரும் நிலையில், அந்த ஜெயலலிதாவின் பங்களாவிலேயே கொலை நடந்துள்ளது அரசின் நிர்வாக தோல்வியாக பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி அருகே ரம்யமான ஒரு பகுதியில் அமைந்துள்ளது கொடநாடு பங்களா. சுற்றிலும் தேயிலை தோட்டம் சூழ்ந்த ஒரு இயற்கை அன்னையின் அருட்கொடை இந்த பகுதி.
ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த இடம் கொலை, தாக்குதல், ரத்த வெள்ளம் என அலங்கோலமாக மாறியது. காரணம், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அந்த பங்களாவின் காவலாளி, ஓம்பகதூரை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல கோணங்கள்
இந்நிலையில் இந்த கொலை மற்றும் கொள்ளை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உலா வருகின்றன. ஜெயலலிதா மரணத்தின் மர்மமே இன்னும் விலகாத நிலையில் அவரது எஸ்டேட் காவலர் மர்ம மரணம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்திருக்கலாம், ஜெயலலிதாவின் ஆவணங்களை திருட வந்த கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என்பது போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
'ஆட்சியாளர்' வீட்டில் கொலை
இது ஒருபக்கம் என்றாலும், இந்த கொலை சம்பவத்தை மற்ற சம்பவங்களை போல மக்களால் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இக்கொலை நடைபெற்றுள்ளது ஆட்சியாளர்களின் வீட்டில். ஆட்சியாளர்கள் கூறுவதை போல இது அம்மா ஆட்சி எனில், அந்த அம்மாவின் வீட்டிலேயே கொலை நடந்துள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு?
போயஸ் இல்லம்போல
சென்னை, போயஸ் இல்லம் எப்படி ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ இல்லமோ அதற்கு சற்றும் குறைவில்லாத முக்கியத்துவத்தை பெற்றிருந்தது, கொடநாடு பங்களா. இன்னும் சொல்லப்போனால், தொடர்ந்து பல நாட்களாக கொடநாட்டில் அமர்ந்து அரசு பணிகளை மேற்பார்வையிட்டவர் ஜெயலலிதா. அரசு கோப்புகள் கொடநாடு பங்களாவுக்கு அதிகாரிகளால் தூக்கிச் செல்லப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே அதில் கையெழுத்திட்டுள்ளார் ஜெயலலிதா. அதாவது, ஒரு தலைமைச் செயலகத்திற்கான முக்கியத்துவத்தை கொடநாடு பங்களா பெற்றிருந்தது.
தலைமைச் செயலகம்
வீடு, அலுவல் இடம் என பல வகைகளிலும் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய ஒரு இடத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளது, அதுவுதும் அதே கட்சி ஆட்சியில் என்பது மிகப்பெரிய வெட்கக்கேடான சம்பவம். சட்டம் ஒழுங்கு நிலை தமிழகத்தில் எப்படியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் கவனம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியை சமாதானப்படுத்த குழு அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். இன்னொரு பக்கம், பிரதமர் மோடியிடம் நெருக்கம் காட்ட பகீரத பிரயத்தனங்கள் செய்கிறார். முயல்கிறார். தினகரன் தரப்பு அடுத்து என்ன செய்யும் என்ற டென்ஷன் வேறு அவருக்கு. இத்தனைக்கும் நடுவே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்துள்ளது. உடனடியாக அரசும், காவல்துறையும் விழித்துக்கொள்வதே தமிழக நலனுக்கு நல்லது.