முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவைதான்.. ஆனால் தமிழகத்தின் ஒத்துழைப்பு முக்கியம்... பினராயி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு தமிழக அரசின் ஒப்புதலும் அவசியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி, அதற்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி கூறி வந்தது. சட்டசபையிலும் தீர்மானம் போட்டது. பூர்வாங்க வேலைகளையும் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது கேரளாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயன், முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. புதிய அணை கட்டுவதற்கான தேவை யில்லை என சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போஸ்டர்களும் ஒட்டினர்.

முல்லை பெரியாறு புதிய அணை குறித்து பினராயி விஜயனின் கருத்துக்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், விஜயன் தான் முன்னதாக தெரிவித்த கருத்துக்கு மாறாக புதியதாக கருத்தை வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவைக்கான பாராட்டு விழாயில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
நானோ தனது அரசோ முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவையில்லை என்ற கருத்து கொண்டவர்கள் அல்ல. புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. எனது அரசின் கருத்தும் அதுதான். ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இந்த பிரச்சினையில் தமிழகத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. தமிழகத்துடன் நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறோம். எனவே, பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் , முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்காக சர்வதேச நிபுணர்கள் குழுவைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு கேரள அரசு தனது திட்டத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications