கொடைக்கானலா வேணாம்பா... ஓவரா குளிருது - அலறும் சுற்றுலாப் பயணிகள்!
கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. மேலும், அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டுள்ளது.
வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களைத் தேடிப் போகும் மக்கள், குளிர் காலங்களில் அந்தப் பக்கம் தலையை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள்.
ஏனெனில், உடலை மென்மையாக வருடிய மலைக்காற்று குளிர்காலத்தில் பனியாக மாறி ஊசி போல் குத்துவது தான். இதனால், பெரும்பாலான மக்களின் முதல் சாய்சாக இருக்கிற கொல்டைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறதாம்.
சீசன்....
முக்கிய கோடைவாசஸ்தலமான கொடைக்கானலில் ஆண்டுக்கு இருமுறை சீசன் களை கட்டும். அதாவது மார்ச் மாதம் தொடங்கும் கோடை சீசன் ஜூன்மாதம் வரை நீடிக்கும். பின், ஆகஸ்ட் மாதம் தொடங்கும் 2-வது சீசன் அக்டோபர் வரை நீடிக்கும்.
சுற்றுலாப் பயணிகள்...
இடைப்பட்ட மற்ற காலங்களில் கொடைக்கானலில் கடும் குளிர், மழை பெய்வது வழக்கம். இக்காலங்களில் கொடைக்கானல் சென்றால் அறையை விட்டு வெளியே வர முடியாது என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகக்குறைவாக காணப்படும்.
முடக்கம்...
இந்நிலையில், தற்போது கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறதாம். இதனால் விடுதிகள், ஓட்டல் அறைகளுக்குள்ளேயே சுற்றுலா பயணிகள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
வெறிச்சோடிய இடங்கள்...
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல் ஏரி, பைன்மரக்காடுகள், தூண்பாறை, உள்ளிட்ட தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
விஐபிக்கள்...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வி.ஐ.பி பயணிகள் மட்டும் தற்போது கொடைக்கானல் வந்து செல்வதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
கடும்குளிர் நிலவுவதால் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டுள்ளது.
கொசுத் தொல்லை...
இதற்கிடையே, சமீப காலமாக கொடைக்கானலில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக மலைப்பிரதேசங்களில் கொசுக்கள் வாழாது என்ற நிலை மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.