ஜெயலலிதா மறைவு.. டாஸ்மாக்கில் கொடி கட்டிப் பறந்த மது விற்பனை… கலெக்டர் விசாரிக்க கோரிக்கை
நெல்லை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விடுமுறை விடப்பட்ட நாளில் மது விற்பனை கொடி கட்டிப் பறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கலெக்டர் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 194 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நெல்லை புறநகர் பகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகள் ரகசியமாக திறக்கப்பட்டு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதற்கு கைமாறாக கடை ஊழியர்களுக்கு ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை கைமாறியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நெல்லை, அம்பை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதியில் மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது. இதனை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
இப்படி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து விபரீதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகி்ன்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்த பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.