ஒட்டு மொத்த இந்தியாவையும் கிளர்ந்தெழ வைத்த இந்திராவின் "எமர்ஜென்சி"
சென்னை: மிசா.. எமர்ஜென்சி.. நமக்கு முந்தைய தலைமுறை மறக்க முடியாத வார்த்தைகள் இவை. 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட இந்த அவசர நிலை சட்டத்தால் இந்தியர்கள் சந்தித்த பாதிப்புகள் ஏராளம், ஏராளம்.
அப்போது நடந்த நிகழ்வுகள் குறித்த மூத்த பத்திரிகையாளர் முராரி தி நியூஸ்மினிட் இணையதளத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
ஜேபி பேரணி
1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார். அப்போது நான் சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சீனியயர் எடிட்டராக இரு்நதேன். எமர்ஜென்சிக்கு எதிராக நாடே கொந்தளித்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் டெல்லியில் மிகப் பெரிய பேரணியை நடத்தினார். அப்போது சட்டவிரோதமான மத்திய அரசின் உத்தரவுகளுக்கு காவல்துறையினர் அடிபணியக் கூடாது என்று அழைப்பு விடுத்தார்.
நல்லதொரு கிளைமேக்ஸ்
லோக்சபாவுக்கு இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று 1975, ஜூன் 11ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழல் எதிர்ப்புப் போரை தீவிரப்படுத்தியிருந்தார். அதற்கு நல்லதொரு கிளைமேக்ஸ் ஆக இந்த எமர்ஜென்சி எதிர்ப்பு பிரசாரக் கூட்டம் அமைந்தது.
விலகிய இந்திரா
எமர்ஜென்சியால் மக்கள் மிகப் பெரும் அவதியை சந்தித்த நிலையில், மக்கள் எதிர்ப்பு பெருகிய நிலையில், ஜே.பியின் பேரணியும் கூடவே சேரவே, வேறு வழியில்லாமல் இந்திரா காந்தி பதவி விலக நேரிட்டது.
அதிகாலையில் வந்த டிக்கர்
ஜூன் 25ம் தேதி அதிகாலை 1.30 மணி இருக்கும். எனக்கு யுஎன்ஐயிடமிருந்து ஒரு 2 பாராவில் அடங்கிய டிக்கர் வந்தது. அதில், அப்போதைய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மோகன்லால் சுக்காடியா ஹைதராபாத்துக்குச் சென்று ஆந்திர முதல்வர் ஜலகம் வெங்கல் ராவைச் சந்தித்ததாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸைச் சந்தித்தாகவும் இருந்தது.
என்னவோ நடக்கப் போகிறது
என்னவோ நடக்கப் போகிறது என்று ஊகித்த நான், உடனடியாக அப்போதைய இந்தியன் எக்ஸ்பிரஸ் எடிட்டர் சி.பி.சேஷாத்ரியின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றேன். அவரை நாங்கள் அனைவரும் மாஸ்டர் என்றே அழைப்போம். பத்திரிகையார்களின் பிதாமகன் அவர். அவர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களுடன் அமர்ந்து அந்த அரசியல் நிகழ்வு குறித்து விவாதித்தார். பின்னர் அவருடைய அறிவுரைப்படி, அந்த செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரித்தேன்.
பிற்பகலில் வந்த எமர்ஜென்சி
பின்னர் 25ம் தேதி பிற்பகல் 2 மணியளவில், நாடு முழுவதும் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டுள்ளதாக அகில இந்தியா வானொலியின் செய்தி அறிவித்தது.
பாராட்டிய மாஸ்டர்
ஏற்கனவே 1962ம் ஆண்டு சீன இந்தியப் போருக்குப் பின்னர் நாட்டின் வட கிழக்கில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருந்து வந்தது. இது பினஅனர் 1971ம் ஆண்டு வங்கதேச போருக்குப் பின்னர் மேலும் தீவிரமடைந்தது. நான் செய்தியைக் கேட்டதும் அலுவலகத்திற்கு விரைந்தேன். அங்கு மாஸ்டரைச் சந்தித்தபோது முதல் நாள் இரவில் நாங்கள் நடத்திய உரையாடலைக் குறிப்பிட்டு அவர் என்னைப் பாராட்டினார்.
கைது செய்ய தலைவர்கள் போட்ட லிஸ்ட்
மேலும், முதல் நாள் சந்தித்துப் பேசிக் கொண்ட அந்த மூன்று காங்கிரஸ் தலைவர்களும், யாரையெல்லாம் கைது செய்யலாம் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கவே சந்தித்துக் கொண்டதாகவும் மாஸ்டர் தெரிவித்தார்.
அத்வானியின் கவலை
நாட்டின் எதிர்காலம் குறித்தும் மாஸ்டர் கவலை தெரிவித்தார். இதே கவலையைத்தான் சில நாட்களுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் மூத்த பாஜக தலைவர் அத்வானியும் குறிப்பிட்டுள்ளார்.
கும்பல் கும்பலாக தலைவர்கள் கைது
எமர்ஜென்சியைத் தொடர்ந்து எந்தெந்தத் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து மிக விரிவான பட்டியலுடன் கூடிய ஒரு தனிப் பட்டியலை எக்ஸ்பிரஸ் தயாரித்தது. வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அப்போது பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
சென்சார்
ஆனால் அன்று இரவே இந்திரா காந்தி அரசு பத்திரிகைகளுக்கு சென்சாரைக் கொண்டு வந்து விட்டது. இதனால் அந்தப் பட்டியலை பிரசுரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நான் அன்று இரவுப் பணிக்கு வந்தபோது அரசின் மொத்த கட்டுப்பாட்டின் கீழ் ஊடகங்கள் வந்திருப்பது தெரிய வந்தது. எங்களது கைகள் கட்டப்பட்டது போன்ற நிலை.
19 மாத அச்ச வாழ்க்கை
அடுத்த 19 மாதங்கள் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அச்சத்துடனும், பீதியுடனும் வாழும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்புகள், போராட்டங்கள் செல்லுபடியாகவில்லை. ஆனால் தமிழகம் அப்போது நிம்மதிப்பெருமூச்சு விட்டது. காரணம் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர் தனது கட்சியின் செயற்குழுவைக் கூட்டி எமர்ஜென்சிக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் போட்டார். மேலும், சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். மேலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அச்சுத் பட்வர்த்Lன் போன்ற பல தலைவர்களுக்கு திமுக அரசு அடைக்கலமும் கொடுத்தது. ஜார்சும், பட்வர்த்தனும் பின்னர் பரோடா டைனமைட் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
டிஸ்மிஸ் ஆன கருணாநிதி
ஆனால் 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன் பின்னரே தமிழகத்திற்கும் நெருக்கடி வந்தது. எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்தால்தான் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதேசமயம், 1971ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலின்போது தமிழகத்தில் அனைத்து சட்டசபைத் தொகுதிகளையும் பறித்துக் கொண்டு வெறும் 9 எம்.பி. சீட்களை மட்டுமே கொடுத்த கருணாநிதியை இப்படிப் பழிவாங்கினார் இந்திரா காந்தி.
சித்திரவதைக்குள்ளான மாறன், ஸ்டாலின்
ஆனால் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் ரத்த ஆறு ஓடவில்லை. ஆனால் முன்னணித் திமுக தலைவர்களான முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் சித்திரவதையும் செய்யப்பட்டனர். எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு 1977ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த சித்திரவதை விவரமே வெளியில் தெரிய வந்தது.
கொடூரமான சென்சார் ஷிப்
இதை விட மிகக் கொடூரமான சம்பவம் எது என்றால் சென்சார்ஷிப் என்ற பெயரில் ஒட்டுமொத்த எக்ஸ்பிரஸ் குரூப்பையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. எந்த செய்தியைப் போடுவதாக இருந்தாலும் அதை முதலில் சென்சாருக்கு அனுப்பி அவர்கள் ஓ.கே செய்தால்தான் பிரசுரிக்க முடியும். மேலும் அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு மட்டுமே அனுமதியும் தரப்படும்.
ராஜனும், செளம்யநாராயணனும்
சென்னையில் இதற்காகவே 2 சென்சார் அதிகாரிகள் இருந்தனர். ஒருவர் ராஜன். இன்னொருவர் செளம்யநாராயணன். செய்திகளுக்கு முந்தைய சென்சார் அமலுக்கு வந்த முதல் நாள் இரவில், கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பேசிய இந்திரா காந்தி, இந்தியாவில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதாக பேசியதை முதல் பக்கத்தி் பிரசுரிக்க செளம்யநாராயணன் உத்தரவிட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதற்கு அவர் உங்களுக்கு உட்காருவதற்கு சீட் கொடுத்து, உட்கார வைத்துப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்காக எனக்கு நீங்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டும். முரசொலி, துக்ளக் பிரதிநிதிகள் எல்லாம் வெளியில் காத்துக் கிடக்கின்றனர் என்றார்.
கோட் வேர்ட்
இந்த சென்சார்ஷிப்பை எதிர்க்க முரசொலி கைது செய்யப்பட்ட தலைவர்களின் பெயர்களை கோட் வேர்ட் வைத்து வெளியிட்டது. துக்ளக்கோ, சர்வாதிகாரி போன்ற பழைய திரைப்படங்களின் பெயரை வைத்து செய்தி போட்டது.
கோர்ட்டுக்குப் போன கோயங்கா
இந்த சென்சார்ஷிப்பை எதிர்த்து ராம்நாத் கோயங்கா கோர்ட்டுக்குப் போனார். இதையடுத்து சென்சார்ஷிப் விளக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த செய்தியையும் கூட வெளியிட விடாமல் தடுத்து விட்டது இந்திரா அரசு.
கஷ்டப்படுத்திய அரசு
அது மட்டுமல்லாமல் கோயங்கா மருத்துவமனையில் சேர்ந்திருந்தபோது, அவருடைய மகன், மருமகள் ஆகியோரையும், குல்தீப் நய்யார், மல்கோகர் போன்ற மூத்த பத்திரிகையார்களையும் தொல்லை கொடுத்து படுத்தினர். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் எடிட்டர் வி.கே.நரசிம்மன் மிகுந்த சிக்கல்களுக்கிடையே எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தை நடத்தினார்.
கரும்புள்ளி
இந்தியாவின் வரலாற்றில் எமர்ஜென்சி மிகப் பெரிய கருப்புப் புள்ளி. சிலர்தான் பத்திரிகை உலகில் இதை எதிர்த்து துணிச்சலாக நின்றவர்கள். அதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் முக்கியமானது. அதேபோல ஸ்டேட்ஸ்மென்னும் தைரியமாக நின்றது. அதேசமயம், ஆர்எஸ்எஸ் இதழ் அமைதியாக இருந்து விட்டது. அது எதிர்த்துப் போராடவில்லை. ரகசியமாக செயல்பட்டது.
அடி கொடுத்த மக்கள்
1977ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தனர். வட மாநிலங்களில் மிகப் பெரிய அடியை காங்கிரஸ் சந்தித்தது. அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பாஜக முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. அதேசமயம் தென் மாநிலங்களில் காங்கிரஸுக்கு 140 இடங்கள் கிடைத்Lன.
திரண்டெழுந்த மக்கள்
எமர்ஜென்சியின்போது முஸ்லீம் ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட் பகுதியில் வசித்து வந்த குடிசைவாசிகளை அப்புறப்படுத்தியது ஆகியவை காங்கிரஸுக்கு எதிராகப் போனது. கேரளாவில் ராஜன் என்ற மாணவர் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். மொத்தத்தில் காங்கிரஸுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்தனர்.
ஆனா, ரயில் மட்டும் கரெக்டா வந்துச்சுபா!
அதேசமயம், ரயில்கள் எல்லாம் சரியான நேரத்திற்கு ஓடின. எனவே எமர்ஜென்சியை நாம் ஏன் வெறுக்க வேண்டும் என்று எனது நண்பரும் மூத்த பத்திரிகையாருமான ராமகிருஷ்ணன் கேட்டதையும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.