திண்டுக்கல்: லோடுமேன் சங்கத்தலைவர் வெட்டிக்கொலை… பழிக்குப் பழியா?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லோடுமேன்கள் சங்கத்தலைவர் ஒருவர் இன்று அதிகாலையில் தனது வீட்டருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஜோசப் சாமிமுத்து மகன் செபஸ்தியான் (வயது45). இவர் திண்டுக்கல் லோடுமேன்கள் சங்க தலைவராக உள்ளார்.
இவரது மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. நர்சிங் படித்து வரும் 4வது மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் வெளியில் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அரிவாளால் அவரது முதுகு, கை, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே செபஸ்தியான் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
செபஸ்தியான் மீது கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் சாக்கு கடை சந்தில் முத்தழகுபட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளது.
மேலும் அரச மரம் கருவாட்டுக்கடை சந்தில் மாரம்பாடியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கும் இவர் மீது உள்ளது. எனவே பழிக்கு பழியாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.