அதிமுக தலைமைக்கு பறக்கும் புகார்கள்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியுமா?
சென்னை: அடிமட்டத் தொண்டன் கூட அமைச்சராவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதை சாதித்துக் காட்டிய ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலிலும் அதேபோன்று பல வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
கட்சியின் நீண்டநாள் விசுவாசிகள், படித்தவர்கள், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என சரிவிகித அளவில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து தொண்டர்களுக்கு நம்பிக்கை விதையை தூவியிருக்கிறார் ஜெயலலிதா.
ஆனால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் பலரைப் பற்றி நாளொரு புகார்கள் தலைமைக்கு பறந்தவண்ணம் இருப்பதால் நம்மால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியுமா? என்று பதற்றத்தோடும், திக் திக் பயத்தோடும் இருக்கின்றனர் சில வேட்பாளர்கள்.
வடசென்னை டி.ஜி.வெங்கடேஷ் பாபு
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரான டி.ஜி. வெங்கடேஷ்பாபுதான் வடசென்னை தொகுதி வேட்பாளர். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருடன் இவர் இன்னமும் நெருக்கமாக இருப்பதாக புகார்கள் பறந்தவண்ணம் இருக்கின்றனர். வடசென்னையை எப்படியும் சிபிஐக்கு ஒதுக்க இருப்பதால், இவர் டம்மி வேட்பாளர்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
பாரதிமோகனின் ஜாதகம்
மயிலாடுதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிமோகன் சாமியார் நித்யானந்தாவின் சீடர் என்ற புகார் போட்டோ உடன் கார்டனை எட்டியிருக்கிறதாம்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாரதி மோகனை மயிலாடுதுறை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்த போதே உள்ளூர் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது. நித்யானந்தாவின் தீவிர விசுவாசியான பாரதிமோகனை வைத்துக்கொண்டு எப்படி வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க முடியும் என்று அதிமுகவினரே புலம்புகின்றனராம்.
நித்தி – பாரதி நட்பு எப்படி?
பாரதி மோகனின் சொந்த ஊர் திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இவர், முதலில் பா.ம.க.வில் இருந்தார். பின்னர் முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன் மூலம் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். 2006-ல் திருவிடைமருதூரில் இவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, எம்.எல்.ஏ.வாக வும் ஆக்கினார் அமைச்சர் வைத்தியலிங்கம்.
நித்திக்கு பாதுகாப்பு
மதுரை ஆதீனத்துக்குள் சாமியார் நித்யானந்தா நுழைந்த உடன், ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் கோயிலுக்கும் நித்யானந்தா வந்தார். அப்போது அவரை எதிர்த்து மணலூர், கோட்டூர், கஞ்சனூர் பகுதி பொதுமக்களும் பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நித்தி சீடர்களை செருப்பால் அடித்தனர். அப்போது நித்திக்கு ஆதரவாகக் களமிறங்கிய பாரதிமோகன், தன் தம்பி குணசேகரனை நித்திக்கு பாதுகாப்பாக நிறுத்தினாராம். அதுமட்டுமல்லாது நித்திக்கு எதிராக போராடியவர்கள் மீது பாரதிமோகன் வழக்கு பதிவு பண்ண வைத்தாராம்.
எப்படி ஜெயிக்க முடியும்?
இப்படி சாமியார் நித்தியானந்தாவுக்கு எல்லாவகையிலும் உதவியா இருக்கும் பாரதிமோகனுக்கு சீட் கொடுத்தா, எப்படி இந்தப் பகுதி மக்கள் எப்ப ஓட்டுப் போடுவாங்க?என்று கேட்கின்றனர் அதிமுகவினர். ஆனால் பாரதிமோகனோ, ""எல்லா சலசலப்பும் விரைவில் அடங்கிவிடும். இது வன்னியர் பெல்ட் என்பதால் அமோகமாக ஜெயிப்பேன்'''என உற்சாகமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்.
வேலூர் வேட்பாளருக்கு வேட்டு
வேலூர் வேட்பாளராக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் செங்குட்டுவன் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இவரை விட சீனியர்கள் வாய்ப்பே இல்லாமல் என்கிற ரீதியில் பல புகார்கள் தினசரி பறக்கிறதாம்.
தப்புவாரா மதுரை கோபாலகிருஷ்ணன்
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்த கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. கோபாலகிருஷ்ணன் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது மனைவி முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். மாமனார் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவை எல்லாம் கோபாலகிருஷ்ணனுக்கு பக்கபலமாக இருந்தாலும், ரியல் எஸ்டேட் பிசினஸ், நில அபகரிப்பு புகார்கள் என வரிசையாக இருப்பதால் அச்சநிலையில் தான் இருக்கிறாராம் வேட்பாளர்.
தவிப்பில் தேனி பார்த்தீபன்
அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தொகுதி தேனி. இப்போது மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பார்த்தீபன் இங்கு வேட்பாளர் ஆகியிருக்கிறார். நிர்வாகிகள் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்று தவிப்பில் இருக்கிறாராம் பார்த்தீபன்.
நீலகிரி கோபாலகிருஷ்ணன்
நீலகிரி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் குன்னூரை சேர்ந்த திமுக விஐபி ஒருவரின் கட்டடத்திற்கு அனுமதி வழங்கும் விசயத்தில் இணக்கமாக நடந்து கொண்டார் என்ற புகார் தலைமைக்கு தட்டிவிடப்பட்டிருக்கிறதாம்.
கன்னியாகுமரி ஜான்தங்கம்
கன்னியாகுமரி வேட்பாளரான ஜான்தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரசில் இருந்து அதிமுகவிற்கு வந்தார். அமைச்சர் பச்சைமால் துணையோடு கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியையும் பிடித்தார். இப்போது எம்.பி.சீட்டையும் கைப்பற்றியிருக்கிறார். இவர் காங்கிரசில் இருந்தபோது முதல்வரின் உருவபொம்மையை எரித்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். அது தொடர்பான ஆவணங்களை தூசு தட்டுகின்றனர் அதிமுகவினர்.
பதற்றத்தில் வேட்பாளர்கள்
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு புகார்கள் பறந்த வண்ணம் இருப்பதால் வேட்பாளர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர். கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உடன் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படலாம். அதேபோல புகார்களுக்கு ஆளான வேட்பாளர்களும் மாற்றப்படலாம் என்கின்றனர் அதிமுகவினர். எனவே கடைசி நிமிடம் வரை திக் திக் மனநிலைதான் வேட்பாளர்களுக்கு என்கின்றனர்.