ஆடி பிறப்பு: ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் சார்பில், திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்
ஸ்ரீ ரங்கம்: ஆடிமாத பிறப்பை ஒட்டி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான், ஸ்ரீபூமதேவி ஸ்ரீதேவிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த வஸ்திரங்கள் திருப்பதி வெங்கடாசலபதிக்கு சர்ப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கடந்த 1320-ம் ஆண்டு முதல் மொகலாயர் படையெடுப்பை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய உற்சவரான நம்பெருமாள், 40 ஆண்டு காலம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வைத்து காப்பாற்றப்பட்டதாக வரலாறு உள்ளது.
இதனை நினைவு கூறும் வகையில், ஸ்ரீ ரங்கம் ஆலயத்தில் இருந்து திருப்பதிக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முதலாம் நாள் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றது.
கோவில் மண்டபத்தில் இருந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஸ்ரீ பூமி தேவி, ஸ்ரீதேவி தாயாருக்கு பட்டுப்புடவைகள், மாலை மற்றும் மங்கலப் பொருட்கள்யாவும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதிக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வஸ்திரங்கள் ஆடி முதல்நாள் திருப்பதி வெங்கடாசலபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.