கவுரவ கொலை அச்சம்... பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்: கவுரவ கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் உயிருக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜின் மகள் கீர்த்தனா சித்த மருத்துவம் படித்துள்ளார். இவரும் சேலத்தைச் செந்தில்குமாரும் 7 ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளனர்.

கீர்த்தனாவும் செந்தில்குமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் கீர்த்தனாவின் பெற்றோர் அந்தஸ்து காரணமாக இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 24-ந் தேதி திருமணம் செய்ததுடன் மதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
அப்போது கீர்த்தனாவின் பெற்றோர் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி கீர்த்தனாவை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே செந்தில்குமாரை கீர்த்தனாவின் குடும்பத்தினர் ஏவிய கூலிப்படையினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் கவுரவ கொலை செய்யப்பட்டுவிடுவோமோ என அஞ்சிய இருவரும் திண்டுக்கல் எஸ்.பி. சரவணனிடம் உயிருக்கு பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எஸ்.பி. சரவணனிடம் அவர்கள் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, எங்களது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு எனது பெற்றோர்தான் பொறுப்பு எனக் கூறினார்.
போலீசில் தஞ்சடைந்த கீர்த்தனா, மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேல் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications