சாலை விபத்தில் பலியான இளைஞன்: புதைத்த இடத்தில் அழுத வளர்ப்பு நாய்
சென்னை: தன்னை வளர்த்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரை புதைத்த இடத்திலேயே உண்ணாமல் உறங்காமல் அழுதுகொண்டே இருந்துள்ளது ஒரு நாய். நாயின் நன்றியுள்ள இந்த செயல் காண்பவர்களின் கண்களை குளமாக்கியுள்ளது.
சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார்.
கடந்த 2 ஆம் தேதியன்று மோட்டார்பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். பலியான பாஸ்கரனின் உடல் ஆவடி பாலத்திற்கு கீழ் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.
தனது வளர்த்த முதலாளியான பாஸ்கரன் புதைக்கப்பட்ட இடத்தை இரவு முழுவதும் சுற்றி வந்த நாய் டாமி, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறுநாள் காலை வரை சமாதியிலேயே உணவு கூட சாப்பிடாமல் படுத்துக் கிடந்தது.
இதை பார்த்த ப்ளு கிராஸ் அமைப்பின் பொது மேலாளரான டான் வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர் நாயை காப்பாற்ற முயற்சித்த போது அது பாஸ்கரனின் சமாதியை விட்டு நகர மறுத்துள்ளது.
பின்னர் அவர்கள் பாஸ்கரனின் தாயான சுந்தரி வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். அப்போது டாமியை பற்றி அவர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த சுந்தரி தனது மகன் ஐந்து வருடமாக டாமியை வளர்த்து வந்ததாக கண்ணீருடன் கூறினார். மகன் இறந்தவுடன் டாமி காணாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் டாமி சுடுகாட்டில் இருப்பதாக கூறிய வில்லியம்ஸ் குழுவினர் சுந்தரியை அங்கு அழைத்து வந்தனர். சுந்தரியை எதிரில் பார்த்த டாமி ஒடி வந்து அவரது காலை தழுவியது.
இதைப் பார்த்த சுந்தரி டாமியின் கழுத்தை பிடித்து தூக்கியபடி கண்ணீர் சிந்தினார். இதை பார்த்த ப்ளு கிராஸ் அமைப்பினரின் கண்களும் குளமாகின.
அதன் பின் டாமியை தனது வீட்டிற்கு சுந்தரி அழைத்து வந்தார். பிறப்பால் நாயாக இருந்தாலும் விசுவாசத்தில் மனிதனை விட மேலாக நடந்த டாமியை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டனர்.