இது தேர்தல் ஆணைய ஸ்டிக்கர்... 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலிண்டர்களில் ஒட்டியது!
ஈரோடு: தமிழக சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கியாஸ் சிலிண்டர்களில் ஒட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடவே அனைத்து மக்களையும் அவர்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வைத்து, 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது.
அந்தவகையில், பல மாவட்டங்களில் மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
வீட்டுக்குள்ளே விழிப்புணர்வு...
இதன்மூலம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை அனைத்து இல்லங்களையும் சென்று சேரும் என்பது அவர்களது நம்பிக்கை. அதோடு, தினமும் இந்த ஸ்டிக்கர்களைப் பார்க்கும் குடும்பத்தார் தேர்தல் தேதியை நினைவில் வைத்துக் கொள்வர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
இது மட்டுமின்றி 18 வயது நிரம்பிய அனைவரும் வரும் சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு வித்தியாசமான முறைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாரத்தான்...
அதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு முறைகளில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்களிப்பு தினத்தை அனைத்து பொதுமக்களும் அறியச் செய்யும் வகையில் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரில் விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு வருகிறது.
ஈரோட்டில்...
ஈரோடு மூலப்பாளையத்தில் நேற்று நடந்த சிலிண்டர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட ஆட்சியாளர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். அப்போது, கியாஸ் சிலிண்டரில் ‘ஸ்டிக்கரை' ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பணியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தாசில்தார் வன்னியசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிலிண்டர்களில் ஸ்டிக்கர்...
இது குறித்து மாவட்ட ஆட்சியாளர் எஸ்.பிரபாகர் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் தினத்தை பொதுமக்கள் அறியும் வகையில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அனைத்து சமையல் கியாஸ் சிலிண்டர்களிலும் தேர்தல் விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு வருகிறது. மேலும், ஏ.டி.எம். மையங்களிலும் இந்த ‘ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது' என்றார்.