தமிழக வெள்ள நிவாரணத்துக்கு லைகா நிறுவனம் ரூ 5 கோடி நிதி!
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத்துக்கு நிதியாக ரூ 5 கோடியை தமிழக அரசிடம் அளித்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.
பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த லைகா நிறுவனம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கத்தி படத்தைத் தயாரித்தது. விஜய் நாயகனாக நடித்த அந்தப் படம் பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வெளியானது.
இலங்கைத் தமிழர்களை அழித்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் எனக் கூறி லைகாவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. ஆனால் இவை அனைத்தையும் மறுத்த லைகா, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்காக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை விவரித்தது.

அதேநேரம் லைகா நிறுவனம் தமிழ்நாட்டில் வர்த்தகம் செய்யவும், தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும் எந்தத் தடையுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்டது.
இப்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள லைகா, தெலுங்கு, இந்தியிலும் பெரிய படங்களைத் தயாரிக்கிறது.
தமிழில் ரஜினி நடிக்கும் 2.ஓ, கமல் நடிக்கும் மருதநாயகம் உள்ளிட்ட நான்கு படங்களையும், தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ஒரு படமும், இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறது. தங்களின் கத்தி ரீமேக்கைத்தான் தெலுங்கு, இந்தியில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் தங்களது அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்த லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா, தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ 5 கோடியை அறிவித்தார்.
இந்த ரூபாய் 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழக நிதி துறை செயலாளர் சண்முகத்திடம் நேரில் வழங்கினார்.












Click it and Unblock the Notifications