வளர்ப்பு மகனை தாக்கியதாக தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமி ஊழியர்கள் 14 பேர் கைது!
சென்னை: வளர்ப்பு மகன் கொடுத்த புகாரின்பேரில் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி ஊழியர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளர்ப்பு மகன் முத்தையா (எ) ஐயப்பனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். சொத்துக்களை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள செட்டிநாடு அரண்மனைக்கு ஐயப்பன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சொத்து விவகாரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் எம்.ஏ.எம்.ராமசாமி கொடுத்த புகாரில், ‘23-ம் தேதி இரவு 11 மணியளவில் ஐயப்பன் மற்றும் அவர் அழைத்து வந்த 50 நபர்கள் செட்டிநாடு அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த முகப்பு கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர். இதைத் தடுத்த ஊழியர்களையும் தாக்கினர். என்னையும், எனது பாதுகாவலர்களையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய ஐயப்பன் மற்றும் அவர் அழைத்து வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
ஐயப்பன் தரப்பில் இருந்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பதில் புகார் தரப்பட்டது. அந்த புகாரில் ‘அரண்மனை வீட்டுக்குச் சென்ற என்னையும், எனது ஆதரவாளர்களையும் எம்.ஏ.எம்.ராமசாமியின் பாதுகாவலர்களும், ஊழியர்களும் தவறான வார்த்தைகளால் திட்டினர். ஆயுதங்களால் தாக்கவும் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இரு தரப்பின் புகார்களையும் பெற்ற பட்டினப்பாக்கம் போலீசார், விசாரணை அடிப்படையில், எம்.ஏ.எம்.ராமசாமியின் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர்.