திமுகவின் உதயசூரியனுக்கு ஃபேஸ்புக்கில் ஓட்டு கேட்கும் மு.க.அழகிரி
மதுரை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு வருடங்களாக அரசியலில் ஆர்வம் காட்டாமல் விலகி இருந்த மு.க.அழகிரி தற்போது, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர் என்று பிரசாரம் செய்து வருவது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30ல் மதுரையில் பொதுக்குழு என்று போஸ்டர் ஒட்டி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கலகக்குரல் எழுப்பினர் அழகிரி ஆதரவாளர்கள். இப்படி போஸ்டர் ஒட்டிய அனைவரும் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக குரல் கொடுத்தார் அழகிரி.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது தேமுதிகவை, திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தார். இதனை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி பேட்டி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தார்.
அழகிரி நீக்கம்
இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தெரிவித்த கருத்து திமுக தலைமையை கலங்கடித்தது. இதனால் அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2014ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி இந்த அதிரடியை முடிவை திமுக தலைமை எடுத்தது.
கிண்டலடித்த அழகிரி
இதைத் தொடர்ந்து, திமுக தலைமையை தொடர்ந்து அழகிரி விமர்சித்து வந்தார். இதனை திமுகவும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அழகிரி தனிக்கட்சிச் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் செய்யாத அழகிரி, நமக்குநாமே முதற்கொண்டு அனைத்தையும் விமர்ச்சித்தார்.
மீண்டும் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி, கருணாநிதியை திடீரென அழகிரி சந்தித்து பேசினார். தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு, திமுகவில் மட்டுமின்றி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. "தந்தை என்ற முறையில் அவரை சந்தித்தேன்" என்று அழகிரி விளக்கம் அளித்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கு அழகிரி
திமுக கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. இதனால், அழகிரி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அழகிரி தரப்பு எதுவும் கூறவில்லை.
ஃபேஸ்புக் பிரச்சாரம்
இந்த நிலையில், அழகிரி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "சூரியனுக்கு சொந்தங்கள் நாங்கள், ஆதரிப்பீர் உதயசூரியன்" என்று பதிவிட்டுள்ளார். அழகிரியின் இந்த பிரசாரம் அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இதன்மூலம் தங்களுக்கு எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
அழகிரி ஆதரவாளர்கள்
இதனிடையே அழகிரியின் இந்த அதிரடி பிரசார முடிவு, திமுக தலைமையை உற்சாகப்படுத்தினாலும், ஸ்டாலினுக்கு இது தலைவலியே என்று கூறப்படுகிறது. தென் மாவட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.